அனேகமான குளங்கள் வான்பாயும் அபாயம்!

கிளிநொச்சி மாவட்டத்திலும் பரவலாக கனத்த மழை பெய்துள்ளது. இந்த நிலையில் கனகாம்பிகைக்குளம், வன்னேரிக்குளம் ஆகியன வான் மட்டத்தை அடைந்து வான்பாய்ந்து வருகின்றன.

கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக கனகாம்பிகைக்குளம் வான்பாய ஆரம்பித்தது. இந்த நிலயைில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த பலத்த மழை காரணமாக வன்னேரிக்குளம் நேற்று வான்பாய ஆரம்பித்தது.

தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குளங்களுக்கு நீர்வருகை அதிகரித்துள்ளது.

நேற்றுக் காலை 7 மணி வாசிப்பின் அடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்துக்கான நீர்ப்பாசனக் குளங்களான,

36 அடி அடைவுமட்டம் கொண்ட இரணைமடுக்குளம் 24 அடி இரண்டு அங்குலமாக உயர்ந்துள்ளது.

26 அடி அடைவுமட்டம் கொண்ட கல்மடுக் குளம் 24 அடி மூன்று அங்குலமாகவும்,

12 அடி அடைவுமட்டம் கொண்ட பிரமந்தனாறு குளம் 9 அடி ஒரு அங்குலமாகவும்,

19 அடி அடைவுமட்டம் கொண்ட புதுமுறிப்பு குளம் 17 அடி ஐந்து அங்குலமாகவும்,

25 அடி அடைவுமட்டம் கொண்டஅக்கராயன்குளம் 18 அடி மூன்று அங்குலமாகவும்,

10 அடைவுமட்டம் கொண்ட கரியாலை நாகபடுவான் குளம் 4 அடி 8 அங்குலமாகவும்,

8 அடி ஆறு அங்குலம் அடைவுமட்டம் கொண்ட குடமுருட்டி குளம் 6 அடி ஒன்பது அங்குலமாகவும் உயர்ந்துள்ளன.

இதேவேளை, 10 அடி ஆறு அங்குலம் கொள்ளளவு கொண்ட கனகாம்பிகைக்குளம் அடைவுமட்டத்தை அடைந்து 5 புள்ளி ஐந்து அங்குலம் வான் பாய்ந்து வருவதுடன், 9 அடி ஆறு அங்குலம் அடைவுமட்டம் கொண்ட வன்னேரிக்குளம் அடைவுமட்டத்தை அடைந்து 3 அங்குலம் வான் பாய்ந்து வருகின்றது.

நீர் நிலைகளுக்கான நீர்வருகை தொடர்ந்தும் காணப்படுவதாலு்ம, மாவட்டத்துக்கு மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் தொடர்ந்தும் இருப்பது தொடர்பில் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ள நிலையில் மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நீர்நிலைகள், நீர்வடிந்தோடும் பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறும், தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இடர் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கிராம சேவையாளர் ஊடாக அல்லது, பாதுகாப்ப தரப்பினர் ஊடாக பாதுகாப்பை பெற்றுக்கொள்ளுமாறும், மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

அனேகமான குளங்கள் வான்பாயும் அபாயம்!

எஸ் தில்லைநாதன்