
posted 13th November 2021

எம்.ஐ.எம்.முகைதீன்
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முக்கிய புள்ளியாகத் திகழ்ந்த எம்.ஐ.எம்.முகைதீன் இன்று சனிக்கிழமை (13.11.2021) கொழும்பில் காலமானார்.
கிழக்கின் அக்கரைப்பற்று 2 ஆம் பிரிவைச் சேர்ந்தவரும், கொழும்பில் வசித்து வந்த வருமான முகைதீனின் மறைவு இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தவரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆராய்ச்சியாளர், பன்னூலாசிரியர், புள்ளிவிபரவியலாளர், ஆவணக்காப்பாளர் எனும் பன்முக அடையாளங்களோடு, திகழ்ந்த இவர்,
முஸ்லிம் ஐக்கிய முன்னணி எனும் அரசியல் கட்சியை நிறுவி அதன் செயலாளர் நாயகமாகவும் இருந்து சளைக்காமல், முஸ்லிம் சமூகத்தின் நலனையே நோக்காகக் கொண்டு செயல்பட்டார்.
கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணியின் ஸ்தாபகரான இவர் “முஸ்லிம் செய்தி” பத்திரிகையின் ஆசிரியராகவும், நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாண கோரிக்கையின் பிதாமகனாகவும் மிளிர்ந்தார்.
வடகிழக்கு யுத்த காலத்தில் முன்னாள் அமைச்சர் மர்ஹ{ம் பதியுதீன் மஹ்மூத்தலைமையில், சென்னையில் இடம் பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தைக்குழுவிலும் இவர் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அன்னாரது மறைவு குறித்து இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான அல்-ஹாஜ் என்.எம்.அமீன் விடுத்துள்ள அனுதாப அறிக்கையில்,
முஸ்லிம் சமூகம் தமது ஆவணக் காப்பகத்தை இழந்துள்ளது எனவும்.
அவரது இழப்பு சமூகத்திற்குப் பேரிழப்பானது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் உட்பட அரசியல், மற்றும் சமூக முக்கியஸ்தர்கள் பலரும் இவரது மறைவு குறித்த அனுதாபச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம்