மன்னாரில் நாளாந்தம் கொவிட் தொற்றாளர் சத வீதம் அதிகரிப்பு. டெங்கு அபாயமும் தோன்றியுள்ளது. பணிப்பாளர் த.வினோதன்
மன்னாரில் நாளாந்தம் கொவிட் தொற்றாளர் சத வீதம் அதிகரிப்பு. டெங்கு அபாயமும் தோன்றியுள்ளது. பணிப்பாளர் த.வினோதன்

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன்

மன்னார் மாவட்டத்தில் நாளாந்தம் கொரோனா தொற்றுவீதம் அதிகரித்து காணப்படுகின்ற அதேவேளையில், இன்றைய கால சூழ்நிலையால் இப்பகுதியில் டெங்கு அபாயமும் ஆரம்பமாகியுள்ளது. ஆகவே ஒவ்வொருவரும் இந் நோய்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கான நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் இவ்வாறு தெரிவித்தார்.

புதன்கிழமை (17.11.2021) காலை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தனது பணிமனையில் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

இச் சந்திப்பின்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;

மன்னார் மாவட்டத்தில், நவம்பர் மாதம் (11.2021) இதுவரை மொத்தமாக 358 பேர் கொவிற் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு கொரோனா தொற்றாளர்களின் மரணங்களும் இம் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது சராசரியாக நாளொன்றுக்கு 22 பேர் கொவிற் தொற்றோடு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை நேற்றைய தினம் அதாவது செவ்வாய் கிழமை (16.11.2021) 30 நபர்கள் கொவிட் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 13 பேர் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும், 06 பேர் மன்னார் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும், 04 பேர் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான மற்றும் முதல் தொடர்பான நபர்களின் பரிசோதனையிலே இவர்கள் அடையாளம் காணப்பட்டவர்களாவார்.

மற்றும் 03 பேர் மாவட்ட பொது வைத்தியசாலையிலும், முருங்கன், பெரிய பண்டிவிரிச்சான், நானாட்டான் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தலா ஒருவரும் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வேளை, கொவிட் தொற்று இக்காலப் பகுதியில் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது இக்கால காலநிலை சுகாதார நடைமுறைகளை மக்கள் கடைபிடிப்பதில் இருந்து வரும் அக்கறையின்மையேயாகும்.

மன்னார் மாவட்டத்திலுள்ள 11 வைத்தியசாலைகளிலும் மற்றும் 5 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் நாளாந்தம் எழுமாறான மற்றும் நோய் தொற்றுக்கான அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைவிட நறுவலிக்குள ஆயுள்வேத வைத்தியசாலையிலும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆகவே ஒவ்வொருவரும் இத் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு சுகாதார வழி முறைகளை நுட்பமாக கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.

அத்துடன் இதுவரை முதலாவது தடுப்பூசி மன்னார் மாவட்டத்தில் சுமார் 90 சத வீதமானோருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டாவது தடுப்பூசி 73 சத வீதமானோர் பெற்றுள்ளனர்.
பாடசாலை மாணவர்களில் 5,599 பேர் இதுவரை தடுப்பூசியை பெற்றுள்ளனர். பாடசாலை செல்லாத பாடசாலை செல்லும் வயதுடையோர் 1,144 பேர் இத் தடுப்பூசியை பெற்றுள்ளனர். முன்றாவது தடுப்பூசியை முன்கள பணியாளர்கள் 595 பேர் பெற்றுள்ளனர்.

இத்துடன் மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சிறிது அதிகரித்து காணப்படுகின்றது. இதுவரை இந்த வருடம் மொத்தமாக 33 நபர்களும் நவம்பர் மாதத்தில் 6 நபர்களும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் நகரப் பகுதியில் குறிப்பாக ஆஸ்பத்திரி வீதி. பனங்கட்டிக் கொட்டு பகுதிகளிலேயே இத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இப்போது நிலவிலரும் காலநிலையால் அதிகமான வீடுகளைச் சுற்றி வெள்ளம் காணப்படுவதால் நுளம்பு அதிகரித்துக் காணப்படுகின்றது.

ஆகவே மக்கள் நுளம்பு பெருக்கம் உள்ள இடங்களை கவனத்துக்கு எடுத்து அவற்றை அழிப்பதில் கவனம் செலுத்துவதுடன், நுளம்பு கடியிலிருந்து தங்களை பாதுகாக்கும் வழிமுறைகளை கடைபிடிக்குமாறும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் சுய சிகிச்சை தவிர்த்து உடனடியாக வைத்திசாலைக்குச் சென்று தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்தார்.

மன்னாரில் நாளாந்தம் கொவிட் தொற்றாளர் சத வீதம் அதிகரிப்பு. டெங்கு அபாயமும் தோன்றியுள்ளது. பணிப்பாளர் த.வினோதன்

வாஸ் கூஞ்ஞ