ஆத்துமாக்களின் சாந்திக்காக நம் இதயங்களில் தீபமேற்றுவோம்

எம்மைவிட்டுப் பிரிந்த ஆத்மாக்களை நினைவுகூரும் முகமாக அமைதியாக எம் வாழுமிடங்களில், நம் இதயங்களில் விளக்கேற்றி ஆத்ம கடன் நிறைவேற்றுவோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

இன்று ஆரம்பமாகும் மாவீரர் தின நினைவு வாரத்தையொட்டி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் ஊடாக தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கை அரசு இறந்தவர்கள் ஆத்மாக்களை நினைவு கூருவதைத் தடைசெய்வது, போர்க்களத்தைவிட, தமிழ்பேசும் மக்கள் நெஞ்சில் ரணகளத்தை எரிய விடுவதாகவே இருக்கின்றது. மனித குலத்தின் பாரம்பரிய மாண்புகளையும் அரசு அழித்தொழிக்கின்றது.

இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றுக் காலத்தில் மக்களும் தமிழ் நிலமும் இனக்கலவரங்களாலும், இனவிடுதலைக்கான போர்க்களத்திலும் இலட்சக்கணக்கான உயிர்களை பலிகொடுத்து ஆறாத ரணகளத்தில் மூழ்கிக்கிடக்கும் மனிதகுல வரலாற்றில் கறைபடிந்து கிடக்கும் நிலைமையை அனுபவித்து வருகின்றோம்.

இறந்தவர்கள் ஆத்ம சாந்திக்காக அந்த ஆத்மாக்களை நினைவு கூர்ந்து பிரார்த்திக்கும், கண்ணீர்விட்டு கலந்து ஆறுதலடையும் நாட்களில் தெரிந்து அஞ்சலிப்பதும் உலக மனிதகுல நாகரிகம். இதனால் அந்த ஆத்மாக்களின் உறவுகளும், மனித நேயம் கொண்டவர்களும் நினைவு கூருவதனால் ஆறுதல் பெறுகின்றோம். இதனை நாகரிக உலகம் ஏற்றுக்கொண்டு கடைப்பிடிக்கின்றது. அரசுகள் அங்கீகாரம் வழங்கி வருகின்றன.

தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள், மதங்கள் குறிப்பாக இந்து மக்கள் ஆத்ம ஈடேற்றத்துக்காக வீடுகளில், நீர் நிலைகளில், புண்ணிய தீர்த்தங்களில், கோவில்களில் நினைவு கூர்ந்து ஆத்ம சாந்திப் பிராத்தனைகளில் ஈடுபடுகின்ற மனித உரிமையை போற்றி வருகின்றார்கள். இலங்கையில் சென்ற காலத்தில் அந்த நாகரிகம் பேணப்பட்டது.

இப்போது அந்தநிலைமை மாற்றப்படுகின்றது. அரச ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டவர்கள் ஜே.வி.பியினர், அவர்கள் இறந்தவர்களை நினைவு கூருகின்றார்கள்.
அரசு இறந்த இராணுவத்தினருக்கு மரியாதை செய்கின்றது. பாராளுமன்ற வளாகத்தில் இந்த நினைவு மண்டபம் உண்டு. ஒரு நாளைப் பிரகடனம் செய்து ஒன்று கூடி அணிவகுத்துப் போற்றுகின்றது.

ஆனால், இலங்கையில் தமிழ் மக்களுக்கு, தமிழ் பேசும் மக்களுக்கு இறந்தவர்களை நினைவுகூர்ந்து ஆத்மசாந்திப் பிரார்த்தனை செய்வதற்கு மனித உரிமை மறுக்கப்படுவது நாகரிகமற்ற, ஜனநாயகமற்ற மனித குல விரோத செயலாகவே மக்கள் மனங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

பொலிஸார் வலிந்து நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடுத்து ஆத்மசாந்தி பிரார்த்தனைக்காக நினைவு கூருவதற்காகத் தடைகளை விதிக்க முயற்சிக்கின்றனர். நீதிமன்றங்கள் மக்கள் தங்கள் ஆத்மசாந்திப் பிரார்த்தனை, நினைவுகூருதல் கடமைகளை, ஈமக்கடனை நிறைவேற்ற அனுமதி வழங்கி வருகின்றன. சில இடங்களில் நீதிமன்றங்கள் அனுமதி மறுத்துள்ளன.

கடந்த காலங்களில் நீதிமன்ற வழக்குகளில் வழக்கறிஞர்கள் வாதாடி கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை பெற்றுள்ளனர். நினைவுகூர, ஆத்மசாந்தி, ஈமக்கடன் நிகழ்த்த அனுமதித்து நீதி வழங்கியுள்ளன.
ஆனால், தமிழ் மக்களின் கார்த்திகைத் தினங்களில் தீபமேற்றி விழா எடுக்கும் நிகழ்ச்சிகளைக் கூட அரசும், பொலிஸாரும் தடை செய்கின்றனர். ஆனபடியால் அரசினதும் பொலிஸாரினதும் இத்தகைய மனித குலத்துக்கு எதிரான இறந்தவர்களின் ஆத்மாக்களை நினைவு கூர்ந்து ஈமக்கடன் செய்வதைக் கூட மறுக்கின்ற அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் மக்களாகிய நாம் ஜனநாயக வழியில் எதிர்த்து நிற்கவேண்டும்.

கொரொனாத் தொற்று நோயைப் பரவ விடாமல் செயற்பட வேண்டிய பொறுப்பையும் நாம் சுமந்து நிக்கின்றோம் என்பதை மனதில் நிறுத்த வேண்டியுள்ளோம்.

எவ்வாறெனினும், இறந்த எம்மைவிட்டுப் பிரிந்த ஆத்மாக்களுக்காக பிரார்த்திக்கும் நினைவுகூரும் முகமாக ஆத்ம கடனை அமைதியாக எம் வாழுமிடங்களில், நம் இதயங்களில் நினைவு கூர்ந்து விளக்கேற்றி நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். இது மக்களின் அடிப்படை உரிமை. அதனை நிலைநாட்டுவோம்.

அத்துடன், தமிழ்த் தேசிய இனங்களுக்கிடையே உள்ள மதங்களுக்கிடையில் முரண்பாடு ஏற்படாமல் நல்லிணக்கத்துடன் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை முன்னெடுக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றுள்ளது.

ஆத்துமாக்களின் சாந்திக்காக நம் இதயங்களில் தீபமேற்றுவோம்

எஸ் தில்லைநாதன்