
posted 29th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளுடன் நுழைந்து தாக்குதல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையுடன் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்தவரை, கேள்வி கேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று நேற்று முன் தினம் திங்கள் (27) இரவு பதிவானது.
தாக்குதலில் வைத்தியசாலை உத்தியோகத்தர் படுகாயமடைந்ததுடன், தாக்குதலை நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.
வாள்வெட்டுத் தாக்குதலால் காயமடைந்த ஒருவரை, உந்துருளியில் ஏற்றியவாறு மதுபோதையில் வந்த நபரொருவர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்குள் நுழைந்து குறித்த நபருக்கு சிகிச்சையளிக்குமாறு கோரியுள்ளார்.
இதன்போது ''ஏன் உந்துருளியில் உள்ளே வந்தீர்கள்'' எனக் கேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது குறித்த நபர், அலுவலக மேசையில் இருந்த அச்சு இயந்திரத்தால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து அங்கு ஒன்றுகூடிய வைத்தியசாலை ஊழியர்கள் குறித்த நபரைப் பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதன்போது காயமடைந்த வைத்தியசாலை உத்தியோகத்தர் மற்றும் வாள்வெட்டில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டனர்.
அண்மைக்காலமாக பலர் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், வைத்தியசாலைச் சேவையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது அச்சுறுத்தலுக்குரியது என வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)