
posted 26th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மீள ஆரம்பமான வீட்டுத்திட்டம் - ஜனாதிபதி ரணில் உறுதி
பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட வட மாகாணத்திற்கான வீட்டுத்திட்டம் அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்ட மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், நாட்டு மக்களின் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட்டு முன்னோக்கி செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் மேலும் கூறினார்.
தெற்காசியாவிலேயே மக்களுக்கு இலவச காணி உரிமையை வழங்கும் ஒரே நாடு இலங்கை எனவும் உறுமய வேலைத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இலவசப் பத்திரங்களை அடுத்த சந்ததியினர் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் உரிமையாளர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட வட மாகாண வீட்டுத்திட்டம் அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் இலவச காணி உரிமைத் திட்டம் அதன் ஒரு படியாகும் என்பதுடன், உறுமய வேலைத்திட்டம் நாட்டிலேயே மிகப்பெரிய தனியார் மயமாக்கல் திட்டம் எனவும் அவர் கூறினார்.
அத்தோடு, தொல்பொருளியல் நடவடிக்கைகளுக்கு தேவையான காணிகளை தவிர்த்து ஏனைய காணிகளை மீள ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதன் பிரகாரம் இந்தக் காணிகள் அனைத்தையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)