
posted 27th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
டெங்கு பரவலைத் தடுக்க மக்களே எம்முடன் இணையுங்கள்
தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் சாய்ந்தமருது பிரதேசங்களில் டெங்கு நோய் வேகமாகப் பரவக்கூடிய அபாயகரமான நிலைமை காணப்படுகிறது. எனவே, பொது மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று சாய்ந்தமருது சுகாதார மருத்துவ அதிகாரி எம். ஜே. கே. எம். அர்சத் காரியப்பர் கோரியுள்ளார்.
மழை நீர் தேங்கிநின்று நுளம்புகள் அதிகமாகி டெங்கு நோயை பரப்பி வருகிறது. தனியே சுகாதாரத் துறையினரால் மாத்திரம் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை சகலரும் அறிவீர். பொதுமக்கள் தமது வீடு வளவுகளில் தினமும் ஒரு 15 நிமிடங்களை ஒதுக்கி, நீர் தேங்கி நிற்கக்கூடிய பொருட்கள் மற்றும் இடங்களை அகற்றுங்கள் அல்லது நீர் தேங்கி நிற்காதவாறு கவனியுங்கள்.
நுளம்புக் கடியிலிருந்து உங்களையும் பிள்ளைகளையும் பாதுகாத்திடுங்கள். இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அல்லது காய்ச்சல் குறைந்தும் உடலில் ஏதும் மாற்றங்கள் இருந்தாலும் இரத்தப் பரிசோதனைக்காக மருத்துவ ஆலோசனையை பெறுங்கள்.
போதிய நீராகாரம் மற்றும் ஓய்வை உறுதி செய்யுங்கள். டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் உங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகருக்கு சுயமாகவே முன்சென்று ஒத்துழைப்பு வழங்குங்கள் என்றும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)