
posted 17th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஜூலை 4இல் மீள அகழப்படவுள்ள கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியை தோண்டும் பணி ஜூலை 4ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் (16) வியாழன் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது, மனிதப் புதைகுழி அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் தெரிவித்தது. இதையடுத்து, எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி மனிதப் புதைகுழி வளாகத்தில் வழக்கு அழைக்கப்படும் என்று வழக்குடன் தொடர்புபட்ட சட்டத்தரணிகளுள் ஒருவரான கே. எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.
மேலும், முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதான வீதி அகழ்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது. இதனால், இந்த வீதிக்குப் பதிலாக மாற்றுப் பாதையை பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யவும், அகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவித்தல்களை வழங்குமாறு நீதிமன்றம் கொக்கிளாய் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 29ஆம் திகதி கொக்குத்தொடுவாயில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் குழாய் பொருத்துவதற்காக கிடங்கு வெட்டியபோது மனித எலும்புக்கூடு எச்சம் அடையாளம் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வில் 39 எலும்புக்கூடுகள், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் இலக்கத் தகடுகள் மற்றும் உடைகள் என்பவை மீட்கப்பட்டன.
இதேவேளை, தொல்லியல் திணைக்களத்தை சேர்ந்த ஆய்வாளர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்த அறிக்கையில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 1994 - 1996ஆம் ஆண்டுக்கு இடைப்பட்டவை என்று கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)