
posted 7th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கிய கலந்துரையாடல்
முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மர்ஹூம் மையோன் முஸ்தபாவின் மகன் றிஸ்லி முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவது சம்பந்தமாக கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயல்குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் மாவட்ட செயல்குழு தலைவர் கே.எம்.ஏ. ஜவாத் தலைமையில் நிந்தவூர் ஈ.எப்.சி. மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட றிஸ்லி முஸ்தபா உரையாற்றுகையில்,
"எனது தந்தை மரணிப்பதற்குமுன் கூறினார். இலங்கையில் இருக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகளில் றிஷாத் பதியுதீன் ஓர் ஆளுமையுள்ள இளம் தலைவர், அவரது கட்சியில் இணைந்து பயணிப்பது சிறந்தது என்றும் என்னிடம் கூறி இருந்தார்.
இந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும், இந்த கட்சியின் கட்டமைப்பும் எனக்கு மிகவும் சிறந்ததாகவும், நம்பிக்கையாகவும் உள்ளது. இந்தக் கட்சியின் மாவட்ட எழுச்சிக்காக முன்நின்று உழைக்க மாவட்ட ரீதியாக எமது இளைஞர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தனது குடும்பத்தினர்களின் முழு வருகையுடனான ஒத்துழைப்புடன் கல்முனை தொகுதியில் பிரமாண்டமான ஒரு இணைவுக்கான நிகழ்வொன்றை நான் நடத்த எண்ணி உள்ளேன்” என்றார்.
இந்த நிகழ்வுக்கு கட்சியின் தேசிய தலைவர் றிஷாத் பதியுதீன் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் வருகையோடு கட்சியில் இணைந்து கொண்டு பயணிக்க அங்கீகாரம் வேண்டியவனாக, அதற்கான நேரத்தையும், காலத்தையும் விரைவில் தலைமையிடம் இருந்து ஒதுக்கிக் தாருங்கள் என கட்சியின் மாவட்ட செயற்குழுவிடம் றிஸ்லி முஸ்தபா வேண்டிக் கொண்டார்.
இங்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயல்குழு உறுப்பினர்கள் அரசியல் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)