
posted 29th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நாடாளுமன்ற தேர்தலுக்கான யுக்தியே உதிரிகளை இணைக்கும் தமிழ் பொது வேட்பாளர் நகர்வு - ரங்கேஸ்வரன்
வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்திற்கொண்டே உதிரிகளாக உள்ள குழுக்களை ஒன்றிணைப்பதற்காக பொது வேட்பாளர் என்னும் நிலையை பயன்படுத்த விக்னேஸ்வரன் போன்றவர்கள் முற்படுகின்றனர் என ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (28.05.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்;
தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்ற அடிப்படையில் செயற்படுகின்றோம். அதனடிப்படையில் ஒற்றுமையை கொண்டுவர என்ன செய்யலாம் என்று நாங்கள் யோசித்தபோது இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை சிந்தித்தோம் என விக்னேஸ்வரன் தெரிவித்ததன் மூலம் தமிழ் மக்களின் அரசியலுரிமை அவர்களின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக இவர்கள் சிறிதளவும் சிந்திக்கவில்லை.
மாறாக தமது சுயனலன்களிலிருந்தே இன்னும் பயணிக்க முற்படுகின்றனர். இதன்மூலமாக இவர்கள் தமிழ் மக்களுக்கு சொல்கின்ற செய்தி எவ்வாறானது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.
நாட்டின் நலன் மக்களின் நலன் மற்றும் பொருளாதார நலன் என்பவற்றிலிருந்து விலகி தமது கொள்கையற்ற கோட்பாடற்ற அரசியல் இலக்கற்ற உதிரிகளை தமிழ் பொது வேட்பாளர் என்ற போர்வையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை இலக்குவைத்தே இவர்களுடைய கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.
சமீபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உங்களுக்குள் ஒற்றுமையில்லை அவ்வாறு உள்ள சூழலில் பொது வேட்பாளரை நிறுத்த முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். அதுமட்டுமல்லாது தமிழ் தேசிய அரசியல் தரப்பின் ஒற்றுமை மீதான தென்னிலங்கையின் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் ஜனாதிபதியின் இந்த கேள்வி இருக்கின்றது.
உண்மையில் ஒவ்வொரு கட்சிகளும் மக்கள் நலன்களை புறந்தள்ளி தமது சுயநலன்களை முன்னிறுத்தியே செயற்படுகின்றன. அவர்களிடம் நிலையான கொள்கை இல்லை. ஒரு நிலையான அரசியல் இலக்கு இல்ல. மக்களுக்கான வழிகாட்டல் இல்லை என்பது விக்னெஸ்வரன் கூற்றிலிரந்து தெளிவாகப் பலப்படுகின்றது.
ஆகவேதான் இந்த நாட்டின் விகிதாசார நிலையை கருத்தில் எடுப்போமாயின் பெரும்பான்மை இனமாக உள்ள தென்னிலங்கையை சேர்ந்தவர்கடுள ஜனாதிபதியாக வர வாய்ப்பள்ளது. இது ஒன்றும் இரகசியமானதல்ல இந்த நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தபோதும் அரசியல் ஸ்திரமற்ற நிலையிலிருந்தபோதும் ரணில் விக்கரசிங்க அவர்களே நாட்டை பொறுப்பேற்றார். இருக்கின்ற அல்லது கூறப்படுகின்ற ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விரமசிங்க அவர்களே நாட்டை வழிநடத்தி செல்லக்கூடிய தகைமை உள்ளவர் என்பதை நாம் மிகத் தெளிவாக கூறிவருகின்றோம்.
இதேவேளை சிங்கள தலைவர்களும், வெளிநாடுகளும் எமது பிரச்சினைகளை புரிந்துகொள்வதற்கு பொதுபேட்பாளர் ஒருவரை நிறுத்தவுள்ளோம் என சுரேஸ் பிரேமச்சந்திரனின் கருத்தானது விசித்திரமாக உள்ளது. தரப்படுத்தலுக்கு எதிராக போராடி உயிர் நீத்த பொன் சிவகுமாரன் முதல் முள்ளிவாய்க்கால் வரை நடந்த அனைத்தும் சிங்களத் தலைவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ தெரியாதென அவர் கருதுகின்றார் போலும்.
2002 புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டதன் பின்னர் இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள் கண்காணிப்பாளர்களாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் தென்னிலங்கையிலும் நிலைகொண்டிருந்தனர். அதில் நோர்வேயின் மத்தியஸ்தமும் இருந்தது.
இவ்வாறிருக்க வெளிநாட்டவருக்கு எமது பிரச்சினையை காண்பிப்பதற்கு பொதுவேட்பாளர் என்ற பேச்சு தமது அஸ்தமித்துப்போகும் தமது அரசியல் இருப்ப தக்கவைப்பதற்கான ஒரு பிரயத்தனமே தவிர இதனால் தமிழ் மக்களுக்க எவ்விதமான பயனும் இல்லை. ஆகவே பொது வேட்பாளர் என்ற கருத்தானது பிரிந்திருக்கும் உதிரிகளை ஒன்றிணைத்து அரசியல் இலாபம் தேடும் ஒரு செயற்பாடாகவே ஈ.பி.டி.பி கருதுகின்றது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)