
posted 27th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழினம் அழிந்த பின்னர்தான் சம்பந்தன் வெளியக சுயநிர்ணய உரிமை கேட்பாரா?
ஈழத் தமிழினம் அழிந்ததன் பின்னர் தான் சம்பந்தன் வெளியக சுய நிர்ணய உரிமையைக் கோரப் போகின்றாரா? என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் தொடர்பில் இரா. சம்பந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், இணைந்த வடக்கு கிழக்குக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு என்பதுதான், சர்வதேச மட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் இலங்கை அரசும் சேர்ந்து இணங்கிக் கொண்ட விடயம். அதற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் முடிவு எதையும் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் எடுக்கக்கூடாது என்று தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் சம்பந்தன் ஐயா கூறியிருக்கின்றார்.
இலங்கை அரசு இன்னமும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்வாகக் கொண்டுள்ளது என்பது சரியென்று கூறமுடாயாதநம்பிக்கை.
வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைப்பிற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு கிழக்கு மாகாணத்தில் நடைபெறாமலேயே உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக இணைப்பு பிரிக்கப்பட்டு, 18 ஆண்டுகள் கடந்துவிட்டன.
அந்தத் தீர்ப்பிலேயே அன்றைய பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, மாகாண சபைகள் இலக்கம் 42ஆம் படி அருகருகே இருக்கக்கூடிய இரண்டு அல்லது மூன்று மாகாணங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றி இணைக்க முடியும் என தெரிவித்திருந்தார்.
உள்ளக சுயநிர்ணய உரிமை என ஐக்கிய நாடுகள் சபையின் நியமங்களின் அடிப்படையிலோ அல்லது சர்வதேச சட்டங்களிலோ கிடையாது. சுயநிர்ணய உரிமை என மாத்திரமே (RIGHT TO SELF - DETERMINATION) குறிப்பிடப்பட்டுள்ளது.
இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள். எனவே பொதுமக்கள் வாக்கெடுப்பை வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நடத்த முடியாது என சம்பந்தன் ஐயா கூறுவது தவறானது.
ஐக்கிய நாடுகள் சபையினால் அல்லது சர்வதேச சமூகத்தினரால் நடத்தப்படும் சுதந்திரத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு (INDEPENDENCE REFERNDUM) புலம்பெயர் மக்கள் தாங்கள் வாழும் நாடுகளிலேயே வாக்களிக்க முடியும். இதற்கு பல நாடுகளில் நடைபெற்ற வாக்களிப்புக்களை உதாரணமாகக் கூற முடியும்.
நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் 2002ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 5ஆம் திகதி இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்ட அறிக்கையில், சமஷ்டி பற்றி ஆராய்வதற்கு இணங்குவது என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் 2003 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 31ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அரசியல்துறை பொறுப்பாளர் அமரர் தமிழ்ச்செல்வனால் கிளிநொச்சியில் வைத்து நோர்வே நாட்டின் அமைச்சர் எரிக்சொல்ஹெய்மிடம் கையளிக்கப்பட்ட தீர்வுத் திட்ட யோசனையை இலங்கை அரசு புலிகளுடன் பேசாமலேயே நிராகரித்திருந்தது.
இலங்கை தீவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்று சொல்லப்பட்டு 75 ஆண்டுகள் கடந்தும், இலங்கை குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் கடந்தும், இனிமேலும் இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைத் தரும் என நம்புவது கானல்நீரானது போன்றது.
அடிக்கடி சம்பந்தன் ஐயா ஈழ தமிழ் மக்களுக்கு உள்ளக சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட்டால் எமக்கு வெளியக சுய நிர்ணய உரிமையை கோரும் உரித்து உண்டு எனவும் கூறுவார். ஈழத் தமிழ் இனம் அழிந்ததன் பின்னர் தான் சம்பந்தன் ஐயா வெளியக சுய நிர்ணய உரிமையைக் கோரப் போகின்றாரா?
தமிழ் கட்சிகளோ அல்லது அதன் தலைவர்களோ எமக்கு தீர்வு சமஷ்டி என்றோ கூட்டு சமஷ்டி என்றோ என்றோ தீர்மானிக்க முடியாது.
சுய நிர்ணய உரிமை என்பது தமக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை அந்த மக்களே தீர்மானிக்க வேண்டும்.
சமஷ்டி தீர்வுக்காகவோ அல்லது கூட்டு சமஷ்டித் தீர்வுக்காகவோ சர்வதேச மத்தியஸ்தம் சாத்தியமில்லை. உள்நாட்டிலேயே உள்ள தீர்வை உள்நாட்டிலேயே பெற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச சமூகமும் கூறும்.
எனவே, ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் அல்லது சர்வதேச சமூகத்தினரால் நடத்தப்படும் பொதுமக்கள் வாக்கெடுப்பை நாங்கள் கோருகின்றோம் என்ற செய்தி சர்வதேச சமூகத்திற்கு இந்த ஜனாதிபதித் தேர்தல் மூலம் சொல்லப்பட வேண்டும். இந்த விடயங்களை தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் சம்பந்தன் ஐயா உட்பட ஈழத் தமிழினத்தின் கவனத்திற்கு சமர்ப்பிக்க விரும்புகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)