
posted 4th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
குப்பைகள் வீதி ஒரத்தில் - பிரதேச சபை, சுகாதாரத்துறை தூக்கத்தில்
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி ஓரங்களில் மருத்துவக் கழிவுகள் உட்பட பொலித்தீன் கழிவுகள் முறையற்ற விதத்தில் கொட்டப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வீதி ஓரங்களில் பொலித்தீன் பைகளால் சுற்றப்பட்டு குப்பைகள் வீதி ஓரங்களில் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்டுள்ள நிலையில் அவை காற்று காரணமாக முழு பகுதியிலும் நிறைந்து காணப்படுவதுடன் மிருகங்களும் அவற்றை உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மருத்துவக் கழிவுகளும் முறையற்ற விதத்தில் கொட்டப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மாவட்டத்தின் பிரதான வீதியில் இவ்வாறு குப்பைகள் நீண்ட காலமாகக் கொட்டப்பட்டுவருவதை மன்னார் பிரதேச சபை கவனத்தில் கொள்ளாமல் குப்பைகளை விரைந்து அகற்றாமல் அலட்சியமாக செயல்படுவதை பலரும் கண்டித்துள்ளனர்.
அதேநேரம் பொலித்தீன் பைகள், பிளாஸ்ரிக் போத்தல்கள் அதிகளவு கொட்டப்பட்டு காணப்படுகின்ற நிலையில் அவ்வப்போது பெய்யும் மழையால் டெங்கு நுளம்புகளும் பெருகக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
எனவே, அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை விரைவாக அகற்றுவதுடன் அப்பகுதிகளில் குப்பைகளைக் கொட்டும் நபர்களுக்கு எதிராக பிரதேச சபை மற்றும் சுகாதாரத் துறையினர் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)