
posted 14th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இணுவில் மக் லியோட் வைத்தியசாலையில் மேலதிக விடுதிகள் திறப்பு
126 வருடம் பழமை வாய்ந்த இணுவில் மக்லியோட் வைத்தியசாலையில் புகழ்பெற்ற மகப்பேற்று வைத்தியர் டாக்டர் கெங்கம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக புதிதாக அமைக்கப்பட்ட மகப்பேற்று, மருத்துவ ,சத்திர சிகிச்சை விடுதிகள் கடந்த வெள்ளிக்கிழமை (10) காலை திறந்தது வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு சிறுவர்கள்,குழந்தைகள் சத்திரசிகிச்சை நிபுணர் பா. சயந்தன் தலைமையில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட்ட கட்டிட தொகுதியை திறந்து வைத்தார்.
இக் கட்டிடத் தொகுதியானது வைத்திய நிபுணர் பா. சயந்தன் மற்றும் அவரது பாரியார் கிருபாளினி அவர்களது சொந்த நிதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் விருந்தினர்களாக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பத்மதயாளன், சத்திரசிகிச்சை நிபுணர் பேராசிரியர் வைத்திய கலாநிதி எஸ். ரவிராஜ் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக மகப்பேற்று வைத்திய நிபுணர்களான ஜெ. கஜேந்திரன்,என். சரவணபவ, வை.சிவாகரன், ஆர். துவாரதீபன் ஆகியோரும், விஷேட அதிதியாக இலங்கை நிர்வாக சேவையின் உயரதிகாரி பொ. பிறேமினியும் கலந்து சிறப்பித்தினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)