
posted 5th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வாக்குறுதியளித்தற்கேற்ப தனித்துவத்தைப் பாதுகாப்போம்
மக்களுக்கு வாக்குறுதியளித்தது போன்று நாம் கிழக்கு மாகாணத்தின் தனித்துவத்தைத் தொடர்ந்து பாதுகாப்போம் என என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான, சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தின கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
மீண்டும் மீண்டும் இனவாதப் பேச்சுக்களைப் பேசுகின்ற கூட்டம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. பட்டிருப்புத் தொகுதியில் கடந்த காலங்களில் இருந்தவர்கள் பாலம் வேண்டாம் சிங்களவர்கள் வந்து விடுவார்கள், தமிழர்களைச் சிங்களம் கற்க வேண்டாம் எனத் தெரிவித்தனர்.
தற்போது அவர்களின் வாரிசுகள் வந்து அவர்கள் எதையெல்லாம் வேண்டாம் என்று சொன்னார்களோ அதற்கு தலைகீழாக மாற்றி அதனையெல்லாம் பயன்படுத்தி எமது மக்களைப் பகடைக்காயாகப் பாவிக்கும் சூழல்தான் தற்போது மட்டக்களப்பு அரசியலில் மாறியிருக்கின்றது.
இவ்வாறான சதிகளிலிருந்து எமது மக்களைக் காத்துக் கொள்வது எமது மண்ணுக்கான மான்மீயத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்வது என்பது தொடர்பில் மிகக் கச்சிதமாகச் சிந்தித்து முன்னேறவேண்டிய காலகட்டத்தில்தான் நாங்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறோம்.
பட்டிருப்பு பாலம் தற்போது உடைந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே நான் பொறுப்பு மிக்க அமைச்சர் என்ற ரீதியில் பட்டிருப்பு பாலத்தையும், சந்திவெளி பாலத்தையும், ஒரு வெளிநாட்டுத் திட்டத்தின் கீழ் செப்பனிடுவதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றேன்.
தற்போதைய அரசாங்கத்தினூடாக அடுத்து வரும் வருடங்களில் கல்வி, பொருளாதார நிலைமைகளையும் நாங்கள் மீட்டெடுக்க முடியும் என நம்புகின்றோம். எனவே, எமது மக்கள் சலித்து விடவேண்டாம். மக்களுக்கு வாக்குறுதியளித்தது போன்று நாம் கிழக்கு மாகாணத்தின் தனித்துவத்தைத் தொடர்ந்து பாதுகாப்போம்.
மக்கள் எமக்கு அளித்த வாக்கின் பிரகாரம் தற்போது நான் அரச பிரதிநிதி என்ற அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளிலும் முன்னின்று செயற்படுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது கட்சி அடைய முடியாத இலக்குகளுக்காகப் போராடாமல் மக்களை இரத்தம் சிந்த வைக்காமல் ஜனநாயக ரீதியாகப் போராடி கையில் இருக்கின்ற மாகாணசபைக்கு அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்கின்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர என்றுமே மக்களை மடையர்களாக்குகின்ற செயல்பாடுகளுக்குக் கட்சி ஆதரவு வழங்காது.
எனக்கு 3 வயதிலே இந்த நாட்டில் 1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. எனது 40 வயதில் அந்த சட்டத்தால் கைது செய்யப்பட்டு 5 வருடங்கள் சிறையிலிருந்து 45 வயதில் வெளியே வந்தேன். பயங்கரவாத தடைச் சட்டம் என்பதை நான் தனிப்பட்ட ரீதியில் உணர்ந்திருக்கின்றேன்.
அச்சட்டம் பற்றி மக்களும் அறிவார்கள். அது ஏற்றுக் கொள்ள முடியாத சட்டமாகும். இருந்தாலும் உலகத்தில் எங்கேயும் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறக்கூடாது, பயங்கரவாதிகள் மக்களுக்குச் சவால்விட முடியாது என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)