
posted 26th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மாவீரர் துயிலும் இல்லக் காணியை அபகரிக்க முயன்ற நில அளவைத் திணைக்களம்
முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை, இலங்கை இராணுவத்தின் 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்பட்ட முயற்சி அப் பகுதி மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் நேற்று (25) தடுத்து நிறுத்தப்பட்டது.
குறிப்பாக நில அளவைத் திணைக்களத்தினர் மற்றும், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர் துயிலுமில்லக் காணியை அளவீடு செய்ய வருகை தந்திருந்தனர். இந் நிலையில் மாவீரர்களின் பெற்றோர், அப்பகுதிமக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும் குறித்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
அத்தோடு குறித்த காணியை அளவீடு செய்து இராணுவத்துக்காக சுவீகரிக்கும் நடவடிக்கையை அனுமதிக்கமுடியாதென அப்பகுதி மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும், அங்கு வருகை தந்த நில அளவைத்திணைக்கள அதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி கைவிடப்பட்டு, நில அளவைத் திணைக்களத்தினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் திலகநாதன் கிந்துயன், மாவீரர்களின் பெற்றோர்கள், கிராம மக்கள் ஆகியோர் இணைந்து ஈடுபட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)