
posted 27th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பழைய யாழ். ஆசிரியர் பாரம்பரியத்தை மீட்டெடுக்க செயலாற்றும் ஜனாதிபதி

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் நிலவிய "யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியம்" நாட்டிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறந்த முன்னுதாரணம். அந்தக் கல்வி முறையை மீளமைக்க தாம் செயல்பட்டு வருகிறார் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், ஆசிரியர்கள் முன்மாதிரியானவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் கோசங்கள் எழுப்பிக்கொண்டு வீதியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களாக இருந்தால் மாணவர்களால் நிராகரிக்கப்படுவார்கள். தொழில் கௌரவத்தைப் பேணுவது அனைத்து ஆசிரியர்களினதும் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (25) ஆசிரியர் நியமன நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மேலும், முன்பு யாழ். ஆசிரியர்களின் சேவை நாடளாவிய ரீதியிலும் சர்வதேச அளவிலும் மிக கௌரவத்துடன் பார்க்கப்பட்டது. அந்தப் பொறுப்பை அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்றினார்கள்.
நான் படித்த கொழும்பு றோயல் கல்லூரியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர்கள் இருந்தனர். அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். அவர்களின் விசேடமான அர்ப்பணிப்பின் காரணமாகவே யாழ்ப்பாணத்தில் பிரபல ஆசிரியர்கள் குறித்து இன்றும் சமூகத்தில் பேசப்படுகிறது. அந்த ஆசிரியர் பாரம்பரியமானது நாட்டின் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் சேவை குறித்து சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது என்றே கூற வேண்டும்.
கல்வி உயர் மட்டத்தில் பேணப்பட்டதால்தான் யாழ்ப்பாணம் கட்டியெழுப்பப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள சில பாடசாலைகள் உலகம் முழுவதும் பெரும் புகழைப் பெற்றிருந்தன. ஹாட்லி கல்லூரி மாணவர்கள் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். எனவே, நீங்களும் அந்த கௌரவமான தொழிலில் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஆசிரியர் பணியில் நீங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். வீதியில் கோஷம் போட்டால் மாணவர்கள் உங்களை ஏற்க மாட்டார்கள். எனவே, உங்கள் பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும். யாழ்ப்பாணத்தின் கல்வி முறை மீண்டும் சர்வதேச மட்டத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)