
posted 16th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நாடு பூராகவும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுப்பு
டெங்கு ஒழிப்பு செயலணியுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி தற்போது டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் விரிவான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் 2023 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியை ஒப்பிடும்போது தற்போது சுமார் 2000 டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் 11,000 நோயாளர்கள் பதிவாகியதாகவும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை விட அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால் அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை கடுமையாக முயற்சி எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
டெங்கு பரவலைக் மட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சுத்தம் செய்யும் தினமாக அறிவிக்க தற்போது சுகாதார அமைச்சு முன்மொழிந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்தின் அண்மைய தரவுகளின்படி இந்த ஆண்டு டெங்கு நோயினால் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2023 ஜனவரி மாதம் முதல் மே 16 வரை நாடளாவிய ரீதியில் 34,511 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதன்படி அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன் அந்த எண்ணிக்கை 17,049 ஆகும். கம்பஹா மாவட்டத்தில் 7,797 பேரும் , கொழும்பு மாவட்டத்தில் 7,219 பேரும் . களுத்துறை மாவட்டத்தில் 2,033 பேரும் பதிவாகியுள்ளனர்.
மேலும், புத்தளம் மாவட்டத்தில் 2,463 நோயாளர்களும் பதிவாகியுள்ளதோடு தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் செவ்வாய் கிழமை (16) தரவுகளின்படி நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இருந்து 2,033 நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 59 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக டெங்கு அபாயமுள்ள வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை கண்டறிந்து சுத்தம் செய்யும் நடவடிக்கைகளுக்கு யாவருக்கும் அறிவிக்கப்படுவதுடன் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படும் பகுதிகளுக்கு டெங்கு நுளம்புகளின் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் தங்கள் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)