
posted 12th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தமிழ், முஸ்லிம் இரு சமூகங்களுக்கும் பேரிழப்பாகும்
தமிழ், முஸ்லிம் சமூகங்களின் உறவுப் பாலமாகத் திகழ்ந்த எழுத்தாளர், பண்ணூலாசிரியர் அனிஸ்டஸ் ஜெயராஜாவின் திடீர் மறைவு இரு சமூகங்களுக்கும் பேரிழப்பாக அமைந்திருக்கிறது என்று கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது.
பேரவை சார்பில் அதன் செயலாளர் செயிட் ஆஷிப் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் அதன் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபினதும் அரசியல் எழுச்சிக்காக பெரும்பங்காற்றியுள்ள அமரர் அனிஸ்டஸ் ஜெயராஜா முஸ்லிம் அரசியலில் முக்கிய வகிபாகமாத் திகழ்ந்திருக்கிறார்.
"அஷ்ரபின் அந்த ஏழு நாட்கள்" தென்கிழக்கு அலகு மூன்று சமூகங்களினதும் முன்மாதிரி பூமி" "திழக்கின் இதயம் தேசத்தின் உதயம்" "சுதந்திர இலங்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்" "எங்கள் தலைவன்" போன்ற நூல்களை எழுதி வெளியிட்டிருப்பதன் மூலம் அனிஸ்டஸ் ஜெயராஜா என்கிற பெயர் முஸ்லிம்கள் மத்தியில் பிரபலம் பெற்றிருந்தது.
இவற்றுள் அஷ்ரபின் அந்த ஏழு நாட்கள் என்ற பரபரப்பான அரசியல் தகவல்களைக் கொண்ட நூல் மிகவும் ஜனரஞ்சகமாக அமையப் பெற்றிருந்ததுடன் முஸ்லிம் அரசியல் வரலாற்றில் தடம்பதித்த ஒரு புத்தகமாக பார்க்கப்படுகிறது.
அரசியல், சமூக, கலாசார கட்டுரைகள், வரலாறு, சமூக நாவல்கள் என்று எழுத்து துறையில் பல பரிமாணங்களில் எழுத்தாற்றலைக் கொண்டிருந்த இவர், அவற்றின் ஊடாக தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஐக்கியத்திற்காக பெரும் பங்களிப்பு செய்து வந்திருப்பதுடன் இதனை இலக்காகக் கொண்டே தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்குவதில், எம்.எச்.எம். அஷ்ரபுடன் கைகோர்த்து ஆக்கபூர்வமான பங்களிப்புகளை செய்திருந்தார்.
அத்துடன் முஸ்லிம் தேசியத்தை அடையாளப்படுத்தி, உறுதிப்படுத்துவதிலும் இவர் மிகக் கணிசமான பங்களிப்பை நல்கியிருக்கிறார்.
27 நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இவர் "கரன்சி இல்லாத உலகம்“ என்ற தொடரினை 12 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக எழுதி சாதனை படைத்திருப்பதானது வியக்கத்தக்க சாதனையாக அமைந்திருந்தது.
நிமிடத்துக்கு 10 சொற்கள், மணித்தியாலத்துக்கு 6 பக்கங்கள் என மொத்தமாக 77 பக்கங்களையும் 7,582 சொற்களையும் கொண்ட இவரது 'கரன்சி இல்லாத உலகம்' என்ற இத்தொடரானது இலக்கியத்துறையில் முக்கிய தடத்தை பதித்திருக்கிறது.
கதை பேச்சிலும், நடத்தையிலும் மிக அடக்கமான, எளிமையான உன்னத மனிதராகத் திகழ்ந்தார். மிகுந்த எழுத்தாற்றலையும், ஊடக ஆளுமையையும் தன்னகத்தே கொண்டிருந்த போதிலும் எவ்வித ஆர்ப்பரிப்புமின்றி ஓர் அமைதியான சுபாவத்துடன் தனது பணிகளை முன்னெடுத்திருந்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)