
posted 25th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்மீகக் கல்வியும், பாதுகாப்பும் கருதி செயல்பட வேண்டும்
மன்னார் மாவட்டத்தில் வாரத்தில் ஒருமுறை ஞாயிறு தினங்களில் கத்தோலிக்க மற்றும் இந்து ஆலயங்களில் மாணவர்களுக்கு ஆன்மீகக் கல்வி கற்பித்தல் நேரங்களில் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்கள் தனியார் கல்வி நிலையங்களில் நடாத்தப்படுவதால் பிள்ளைகளை ஆன்மீகத்தில் வளர்த்தெடுக்க முடியாத நிலை உருவாகி வருவதாக கத்தோலிக்க மற்றும் இந்து சமயத் தலைவர்களால் குற்றம் சாட்டப்படுகின்றன.
இது தொடர்பாக கடந்த 15.03.2023 அன்று புதன்கிழமை மன்னார் இந்து மதபீடத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக காலை 9.30 மணி முதல் அடையாள கவனயீர்ப்பு போராட்டமும் இடம்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவற்றெல்லாம் கவனத்துக்கு எடுக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட தனியார் கல்வி நிலையங்களின் இயக்குனர்களுடனான கூட்டம் வியாழக் கிழமை (25) மாலை 3 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்டான்லி டிமெல் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த இக்கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதாவது,
- ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் கல்வி நிலைைங்களை காலை 11 மணிக்கு பின்னரே ஆரம்பிக்க வேண்டும்.
- கிழமையின் ஏழு நாட்களிலும் மாலை 6 மணியுடன் தனியார் கல்வி நிலையங்கள் மூடப்பட வேண்டும்.
- பதிவு செய்யப்படாத தனியார் கல்வி நிலையங்கள் அவசரமாக பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாவிட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- மாணவர்களின் ஒழுக்கம், ஆன்மீகம் போன்றவற்றில் தனியார் கல்வி நிறுவனங்களும் கவனம் செலுத்த வேண்டும்.
- உரிய இருக்கை வசதி, சுத்தமான குடிநீர், சுகாதாரம் போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்
என்பனவாகும்.
குறித்த கூட்டத்தில் சர்வ மதத் தலைவர்கள், மன்னார் மறைமாவட்ட புனித செபஸ்தியார் பேராலய பரிபாலகர் அருட்பணி இ. அகஸ்ரின் புஸ்பராஜ் அடிகளார் மற்றும் தேசகீர்த்தி சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக் குருக்கள் உட்பட மன்னார் பிரதேச செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், தனியார் கல்வி நிலையங்களின் பிரதிநிதிகள், மாவட்டச் செயலக முக்கிய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)