
posted 22nd May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
குடிதண்ணீர்த் திட்டம்
“யாழ்ப்பாணத்துக்கான குடிதண்ணீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதியுடன் பேசி உரிய நடவடிக்கை எடுங்கள். குறிப்பாக இரணைமடுவில் இருந்து குடிதண்ணீர் கொண்டு வருவதாக இருந்தது. ஆனால் தற்போது அது சாத்தியமற்ற விடயமாகிவிட்டது. யாழ்ப்பாண மக்களுக்கு தேவையான குடிதண்ணீரைக் கொண்டு வரக்கூடிய நடவடிக்கையை நீங்கள் உடன் செயற்படுத்துங்கள்” இவ்வாறு இன்று (22) திங்கள் புதிதாக பதவியேற்ற வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸிடம் கோரிக்கை விடுத்தார் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம். வடக்கு மாகாண ஆளுநரின் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
எங்கள் இலக்குகள், அபிலாசைகள் என்ன என்பதை நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. நீங்கள் எங்களில் ஒருவர். இரண்டு விடயங்களை நான் சொல்லவேண்டிய நிலையில் உள்ளேன்.13ஆவது திருத்தச் சட்டத்தைப் பற்றிப் பேசுகின்றோம். நான் அதற்கு மேலாக என்னுடைய கருத்தை தெரிவிக்க விரும்புகின்றேன்.
13 இன் படி நீங்கள் கொஞ்சம் தெளிவாகவும் இறுக்கமாக இருப்பீர்கள் என நாங்கள் நம்புகின்றோம். அந்த வகையில் இருக்கின்ற பல விடயங்கள் பிடுங்கப்பட்டுள்ளன. அவற்றை எவ்வாறு மீளப் பெறலாம் என்பது பற்றி நான் சொல்லிதான் தெரியவேண்டியதில்லை. அது உங்களுக்கு தெரிந்த விடயமே.
சில ஆளுநர்கள் நிர்வாகத் திறன் அற்றவர்களாகவும், மாகாணமுறை தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், உங்களுக்கு மாகாண அனுபவம் உண்டு. ஆகவே, எடுத்த விடயங்கள், எடுக்கப்பட்ட விடயங்கள் அல்லது பிடுங்கப்பட்ட விடயங்களை திருப்பிப் பெறுவதிலே உங்கள் முயற்சி காணப்படவேண்டும்.
மாகாணத்துக்குரியதாக இருப்பதை மத்தி எடுப்பதை நாங்கள் தவிர்க்கவேண்டும். அது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றது. மாகாணத்துக்குட்பட்ட விடயங்கள் எடுக்கப்படுபவற்றைத் தடுக்க வேண்டும்.
எமது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெண்மணி நீங்கள். எனவே, இங்குள்ள அதிகாரிகளும் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள்.
எனவே, வடக்கு மாகாண மக்களுக்கு உங்களால் முடிந்தளவு உதவுங்கள். அதேபோல யாழ்ப்பாணத்துக்கான குடிதண்ணீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதியுடன் பேசி உரிய நடவடிக்கை எடுங்கள். குறிப்பாக இரணைமடுவில் இருந்து குடி தண்ணீர் கொண்டு வருவதாக இருந்தது. ஆனால், தற்பொழுது சாத்தியமற்ற விடயமாகிவிட்டது. யாழ்ப்பாண மக்களுக்கு தேவையான குடிதண்ணீரைக் கொண்டு வரக்கூடிய நடவடிக்கையை நீங்கள் உடன் செயற்படுத்துங்கள். அதற்கு நாங்கள் எங்களாலான பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)