
posted 6th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கிழக்கை எவ்வாறு மீட்க முடியும்
கிழக்கு மீட்பர்களின் ஒவ்வொரு செயற்பாடுகளும் எமது இருப்பை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளாகவே இருக்கின்றது. வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலே நடைபெறுகின்ற சிங்கள, பௌத்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஒரு கருத்துக் கூட வெளியிடாதவர்களால் எங்கள் இனத்தை எவ்வாறு காப்பாற்ற முடியும்? கிழக்கை எவ்வாறு மீட்க முடியும்? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கேள்வியெழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
எமது நாடு சுதந்திரம் அடைந்த காலம் தெட்டு இன்றுவரை எமது தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து இன்றுவரை ஒரு நியாயமான தீர்வு இல்லையென்ற ஆதங்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நாட்டில் பௌத்த மேலாதிக்கம் மேலோங்கி எமது தமிழர்களின் எதிர்காலம், இருப்பு, கலாசாரம் சம்பந்தப்பட்ட விடயங்களில் தொடர்ச்சியான அடக்கு முறைகளையும், ஒடுக்கு முறைகளையும் ஏற்படுத்தி வருகின்றது.
இதற்கெல்லாம் எங்களுடைய இனத்தைச் சேர்ந்தவர்களே துணையாக இருந்து செயற்படுவதுடன், அவர்கள் சிங்களப் பேரினவாதம் போடுகின்ற தாளத்திற்கு ஆடுகின்றவர்களாகவே இருக்கின்றார்கள். ஆனால், பேச்சில் மாத்திரம் கிழக்கை மீட்பது பற்றிப் பேசுகின்றார்கள்.
2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டபோது நானும் அரசியலில் இருந்தேன். கிழக்கை மீட்கப் புறப்பட்டவர்களின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் நானும் அனுபவித்தவன். அவர்கள் மாகாண சபையில் இருந்தபோது நான் பிரதேச சபையின் தவிசாளராக இருந்தவன் என்ற வகையில் அந்த நான்கரை வருடங்களாக எமது கிழக்கு மாகாணத்தையும், எமது சமூகத்தையும் ஏமாற்றியவர்கள் இன்னும் இன்னும் ஏமாற்றுவதற்கான சகல வேலைகளையும் செய்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்குப் பின்னால் நமது இளைஞர்கள் செல்வதுதான் மிகவும் மன வேதனையான விடயம்.
உண்மையிலேயே எமது சமூகம் மீண்டும் மீண்டும் இவர்களுக்குப் பின்னால் சென்றால் எதிர்காலத்திலும் ஏமாற்றத்தைச் சந்திக்கப் போவதே உறுதி. ஏனெனில் அவர்களின் ஒவ்வொரு செயற்பாடும் தமிழ் மக்களுக்கென்று இருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை வலுவிழக்கச் செய்வதே.
நாங்கள் ஒரு புனித பயணத்தைப் பயணிக்கின்றோம். எங்களுடைய செயற்பாடுகளை எவராலும் அழிக்க முடியாது. ஆனால், அவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளவேண்டும். அவர்களின் ஒவ்வொரு செயற்பாடும் எமது இருப்பை இல்லாதொழிக்கும் முயற்சியாகவே இருக்கின்றது.
அண்மைக் காலங்களிலே வடக்கு - கிழக்குப் பிரதேசங்களிலே நடைபெறுகின்ற சிங்கள, பௌத்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஒரு கருத்துக் கூட வெளியிடாதவர்களால் எங்களுடைய இனத்தை எவ்வாறு காப்பாற்ற முடியும்? கிழக்கை எவ்வாறு மீட்க முடியும்? தற்போது இந்த ஆட்சி தொடங்கி சுமார் மூன்று வருடங்களாகின்றது. அவர்களால் என்ன வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடிந்திருக்கின்றது? எத்தனை தொழில் வாய்ப்புகளை வழங்க முடிந்திருக்கின்றது?
இன்று கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச தரப்போடு இணைந்து இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றார்கள். அந்தப் பதவிகள் எமது இருப்பை இல்லாதெழிப்பதற்காகவே அவர்களுக்கு வழங்கப்பட்டவை என்பதை இன்று எமது மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள். இனியும் இவர்களால் எமது மக்களை ஏமாற்ற முடியாது.
எனவே நாங்கள் ஒன்றுபடவேண்டும் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)