
posted 28th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா செலவு விபரங்கள்
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவை நடத்துவதற்காக கத்தோலிக்க மத அலுவல்கள் திணைக்களத்தால் 12 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக யாழ். மாவட்ட செயலகம் குறிப்பிட்டுள்ளது.
கச்சதீவு திருவிழாவுக்கான செலவு விவரங்கள் தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்துக்கு அனுப்பப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்துக்கு இரு மாதங்கள் கழித்து மாவட்ட செயலகம் பதில் அளித்துள்ளது.
அதன் முழுவிவரம் வருமாறு,
கச்சதீவு திருவிழாவுக்கு கத்தோலிக்க மத அலுவல்கள் திணைக்களத்தால் 12 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்த நிதியில் நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு 10 இலட்சம் ரூபாயும், யாழ். மாவட்ட செயலகத்துக்கு 2 இலட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டன.
யாழ். மாவட்ட செயலகத்துக்கு வழங்கப்பட்ட இரண்டு இலட்சம் ரூபாய் உற்சவத்துக்கு தேவையான பொருட்கள், குடிதண்ணீர் தாங்கி மற்றும் தளபாடங்களை கொண்டு செல்வதற்கும், அவற்றை திருவிழா முடிவடைந்ததும் மீள உரிய இடங்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதற்குமான எரிபொருள் செலவு, கச்சதீவு திருவிழா தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல்களுக்கான ஒழுங்கமைப்பு செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டது.
மேலும், நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாயில் உணவுப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், எரிபொருள், மின்பிறப்பாக்கி, சுத்திகரிப்பு பணியாளர் சம்பளம், படகு கட்டணம், நீர்ப்பம்பிச் செலவுகள் உள்ளடங்குகின்றன.
2023.02.25 அன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது, கச்சதீவு திருவிழாவில் அதிகளவு இந்திய பக்தர்களும் கலந்துகொள்வதால் இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்படும் செலவினங்களில் சிலவற்றை மீளளிப்பு செய்வதாக இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
அதற்கமைய, கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட செலவு விவரங்களின் நிதிக்கோரிக்கை விவரம் யாழ். இந்திய துணைத் தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இம்முறை இடம்பெற்ற கச்சதீவு திருவிழா தொடர்பில் உரிய ஒழுங்கமைப்புகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் திருவிழா முடிவுற்ற மறுநாளே ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ஒதுக்கப்பட்ட நிதியின் யாழ். செலவு விபரங்கள் மாவட்ட செயலகத்தால் விரிவாக தரப்படாத நிலையில், நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் செலவு விவரங்களை நெடுந்தீவு பிரதேச செயலகம் ஊடாக பெற்றுக்கொள்ளுமாறு தகவல் கோரிக்கையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)