
posted 11th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
அநீதிக்குத் தீர்வு
தேசிய கல்வியற் கல்லூரிகளில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவித்தார்.
நீதிக்கான மய்யத்தின் சாய்ந்தமருது காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில் மேலும் தெரிவிக்கையில்;
கல்வியற் கல்லூரிகளில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ பாடத்திற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதில் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக எமது நீதிக்கான மய்யம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கை காரணமாக தற்போது கல்வி அமைச்சு தீர்வினை வழங்க முன்வந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த 08.02.2023 ஆம் திகதி நாம் முறைப்பாடொன்றினை பதிவு செய்திருந்தோம்.
கடந்த பல வருடங்களாக கிறிஸ்தவ, இந்து, இஸ்லாம் சமய பாடநெறிகளுக்கு கல்வியற் கல்லூரிகளுக்கு சமமான எண்ணிக்கை கொண்ட மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டு வந்துள்ளனர். 2018ஆம் ஆண்டில் தமிழ் மொழி மூலமாக இம்மூன்று பாட நெறிகளுக்கும் தலா 30 மாணவர்கள் உள்ளீர்ப்பு செய்யப்பட்டனர். 2016, 2017 ஆண்டுகளிலும் சமமான எண்ணிக்கையிலேயே மாணவர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
எனினும் 2022 ஆம் ஆண்டு இந்து சமய பாடத்திற்கு 40 மாணவர்களையும் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ பாடநெறிகளுக்கு தலா 20 மாணவர்களையும் உள்வாங்க இருப்பதாக கல்வி அமைச்சு வர்த்தமானியில் அறிவித்திருந்தது.
இந்த வர்த்தமானியை ரத்து செய்து இஸ்லாம், கிறிஸ்தவ பாடநெறிகளுக்கு மாணவர்களை கூடுதலாக உள்வாங்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவில் நீதிக்கான மய்யம் முறைப்பாடொன்றினை பதிவு செய்திருந்தது.
இதையடுத்து மனித உரிமை ஆணைக்குழு மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக கல்வி அமைச்சு குறித்த இரு பாடநெறிகளுக்கும் கூடுதல் மாணவர்களை உள்ளீர்ப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக நீதிக்கான மய்யத்திற்கு அறிவித்துள்ளது.
சமூக நிறுவனங்கள் கல்வியலாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கல்வியற் கல்லூரிகளில் இஸ்லாம், கிறிஸ்தவ பாடங்களுக்கான மாணவர்களின் எண்ணிக்கை இஸ்லாம் பாடத்திற்கு 60 ஆகவும் கிறிஸ்தவ பாடத்திற்கு 34 ஆகவும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை நாம் வரவேற்கின்றோம் என்று குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் சந்திப்பில் நீதிக்கான மய்யத்தின் பிரதித் தலைவர் யூ.கே.எம். றிம்சான், செயலாளர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)