
posted 9th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு
"கல்விப்பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி" என்பதற்கமைய தனக்கு கிடைத்த ஆசிரியப் பணியை சிறப்பாக மேற்கொண்டு சமூகத்தின் மத்தியில் நற்பெயரைப் பெற்றுக் கொண்ட கல்முனை சேனைக் குடியிருப்பைச் சேர்ந்த ஆசிரியை திருமதி. கிருபாதேவி இராமலிங்கம் 2023.05.15 ஆந் திகதி அன்று ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.
கல்முனை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த அமரர் முருகுப்பிள்ளை, பூமணி தம்பதியினருக்கு முதலாவது மகளாக 1963.05.16 ஆந் திகதி பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை கல்முனை சேனைக் குடியிருப்பு கணேஷா மகா வித்தியாலயத்திலும், இடைநிலை மற்றும் உயர் கல்வியை கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையிலும் (தேசியப் பாடசாலை) கற்றார்.
1990.06.11ஆந் திகதி ஆரம்பக் கல்வி ஆசிரியையாக நியமனம் பெற்ற இவர் தனது கிராமத்திலுள்ள கமு/கமு/ கணேஷா மகாவித்தியாலயம், கமு/கமு/நற்பிட்டிமுனை சிவசக்தி மகாவித்தியாலயம், கமு/கமு/துரைவந்தியமேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்பவற்றில் சுவடுகள் சிறக்க முப்பத்து மூன்று வருட காலம் சேவையாற்றியுள்ளார்.
இவர் சேவையாற்றிய பாடசாலைகளில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சித்தி பெற பாடசாலை நேரம் தவிர்த வேளைகளிலும் அர்ப்பணிப்புடன் கல்வி பணியை மேற்கொண்டு கல்வி அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் பெற்றோரின் நன்மதிப்பை பெற்றவர்.
இவை தவிர, பாடசாலை மாணவர்கள் இணைப் பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபட்டு சாதனைகள் படைக்கவும் உழைத்துள்ளார்.
பாடசாலை நாட்களில் லீவு பெறாமல் அர்ப்பணிப்புடன் கருமமாற்றிய இவரை கண்ணியப்படுத்தும் வகையில் கல்வி அமைச்சின் உயர் நியமங்களுக்கமைய வழங்கப்படும் உயர்விருதான "குரு பிரதீபா பிரபா" விருது அறிமுகம் செய்யப்பட்ட முதலாவது வருடத்தில் ( 2011 ஆம் ஆண்டு) அந்த விருதை கல்முனை கல்வி வலயத்தில் இருந்து பெற்ற அதிபர்கள் ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.
தேசிய கல்வி நிறுவத்தின் கல்முனைப் பிராந்திய தொலைக்கல்வி நிலையத்தில் 1991 தொடக்கம் 1995ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆசிரிய பயிற்சியை நிறைவு செய்து தொழில் தகைமையைப் பெற்றார்.
சித்த வைத்திய மற்றும் சோதிடம் சார்ந்த குடும்ப பின்னணியில் உள்ள இவர் இத் துறைகளிலும் அதீத ஈடுபாடு மிக்கவர். இவர் சமய சமூக செயற்பாட்டாளராகிய அரசரெத்தினம் இராமலிங்கத்தின் பாரியாராவார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)