இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

இன்றைய செய்திகள்

இராணுவத்தின் புதிய தளபதி

இராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே நியமிக்கப்படவுள்ளார். இவர் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி பொறுப்பை ஏற்பார்.

ஜெனரல் சவேந்திர சில்வா பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டமையை தொடர்ந்தே விகும் லியனகே இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் விகும் லியனகேயும் கஜபா படைப் பிரிவை சேர்ந்தவராவார். கடந்த ஆண்டு தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையின் கட்டளை தளபதியாக இவர் பணியாற்றியிருந்தார்.

கைமாறும் எரிவாயு வி நியோகம்

யாழ்.மாவட்டத்திலுள்ள சகல மக்களுக்கும் தேவையான எரிவாயு வழங்கும் செயற்பாட்டுக்கு யாழ். மாவட்ட லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர் ஒத்துழைக்காவிட்டால் ராணுவத்தினரின் உதவியுடன் பொதுமக்களுக்கான எரிவாயுவை விநியோகிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் குடும்ப பங்கீட்டு அட்டைக்கு எரிவாயு விநியோகிக்க மாவட்ட செயலகத்தினால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆயினும், யாழ்.மாவட்ட எரிவாயு பிரதான விநியோகஸ்தர் ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதன் காரணமாக இராணுவத்தின் உதவியுடன் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட செயலக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாரம் லிட்ரோ காஸ் நிறுவனத்தினரால் நாடு பூராகவும் எரிவாயு விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் எரிவாயுவை பங்கீட்டு அட்டைக்கு விநியோகிக்க முற்பட்டபோது யாழ். மாவட்ட லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனினும், எதிர்வரும் நாட்களில் பிரதேச செயலகங்கள் ஊடாக கிராம சேவையாளர்களின் ஒத்துழைப்புடன் குடும்ப அட்டை மூலம் எரிவாயு விநியோகம் இடம்பெறவுள்ளதாகவும், அதேவேளை எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் போது எரிவாயு விநியோகஸ்தர்களால் இடையூறு ஏற்படுத்தப்படும் என்பதை கருத்திற் கொண்டு இராணுவத்தின் உதவியை பயன்படுத்தி குறித்த எரிவாயு சிலிண்டரை பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் மாவட்ட செயலக உள்ளகத் தகவல்கள் தெரிவித்தன.


பிரதம ரிடமும் வாக்குமூலம்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவிடம் குற்றப்புலனாய்வு துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

மே 9 ஆம் திகதி அலரி மாளிகையில் மகிந்த ராஜபக்‌ஷவை சந்தித்த பின்னர் பொதுஜன பெரமுன குண்டர்கள் நிகழ்த்திய கொலைவெறித் தாக்குதல் பெரும் வன்முறையாக உருவெடுத்தது. நாடு முழுவதும் ஒன்று திரண்டு, பொதுஜன பெரமுன அரசியல்வாதிகளின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டார். வன்முறைகளில் சுமார் 10 வரையானவர்கள் உயிரிழந்திருந்தனர்.

இந்த சம்பவம் பற்றி குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதன் ஒரு அங்கமாக மகிந்த ராஜபக்‌ஷவிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கச்சதீவைக் கைகழுவ எங்கள் நாடு தயாரோ??

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கச்சதீவு மீள இந்தியா பெறுவது தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு இதுவரை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் மௌனம் சாதிக்கின்றனர் என யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா கேள்வி எழுப்பினார்.

யாழ்.மாவட்ட கடற்றொழிலாளவமர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

அண்ணாமலை கூறிய கருத்து உண்மையா பொய்யா என்பது தொடர்பாகவோ அது எமக்கு சாதகமா பாதகமா என்பதைக்கூட அரசியல் தலைவர்கள் தயங்குகின்றீர்கள். உங்கள் தயக்கம் எங்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை வெளிப்படையாகப் பேசுகிறார். நீங்கள் ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்? உங்களால் அதனை வெளிப்படையாக கூறமுடியாமல் இருக்கின்றதா? என்பது மீனவர் சமூகத்திலேயே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் இந்த செய்தியை மறுத்திருந்தார். அவருடைய கருத்தை நாம் வரவேற்கின்றோம்.
இது தொடர்பாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கும்போது, வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 9 பாராளுமன்ற உறுப்பினர்களில் கடற்றொழில் அமைச்சரை தவிர ஒருவர் கூட இது தொடர்பில் பேசவில்லை.

ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்? நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லையா? எங்கள் பிரச்னை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தோடும், இந்திய அரசாங்கத்தோடும் பேசி முடிவெடுக்காது இருந்தால், இந்த பிரச்னையை தீர்க்கச் சொல்லி நாங்கள் வேறு யாரிடமும் கையேந்தி கேட்போம். அப்போது எங்களுக்கு முட்டுக்கட்டை போடாதீர்கள்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கள் பிரச்னைகளை பேசுங்கள். இல்லையே எங்கள் பிரச்னையை நீங்கள் பேசாமல் விடுங்கள். நாங்கள் துறைசார் அதிகாரிகளுடன் பேசி தீர்வு காணத் தயாராக உள்ளோம் என்றார்.



ரணிலின் வீட்டின் முன் வியாபித்த போராட்டம்

நீதிமன்ற தடையை மீறி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு மற்றும் அலுவலகப் பகுதியில் இன்று போராட்டம் இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தை பொலிஸ், விசேட அதிரடிப் படை தடுத்து நிறுத்தியமையால் அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்தது.

அலரி மாளிகைக்கு அண்மையான 'நோ டீல் கம' போராட்ட கிராமத்திலிருந்து பிளவர் வீதியை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர். அவர்களை பொலிஸார் தடுத்த நிலையில் வீதியை மறித்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், பூங்கா வீதியை அண்மித்துள்ள பல வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிய வருகின்றது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு அமைந்துள்ள கறுவாத்தோட்டம் 5 ஆம் ஒழுங்கை, மற்றும் அந்தப் பகுதியில் உள்ள வீதிகள் மற்றும் பாடசாலைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை தடுக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இன்றைய செய்திகள்

கடற்றொழிலாளர்களின் கவனவீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எரிபொருளை பெற்றுத்தரகோரி கவனவீர்ப்பு போராட்டத்தை இன்று முன்னெடுத்தனர்.

மண்ணெண்ணைய் இல்லாததால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் கடற்றொழில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மண்ணெண்ணெயை பெற்றுத்தரகோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலகம் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன் ஆர்ப்பாட்டகாரர்களை உள்ளே அழைத்து கடற்றொழிலாளர்களின் மனுவை பெற்றுக் கொண்டார்.

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY

மேலதிகச் செய்திகள்