
posted 16th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
வெடுக்குநாறிமலையில் கைதான தமிழர்களை விடிவிக்க தமிழ் கட்சிகள் நடவடிக்கை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக சந்தித்து, வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்ட 8 தமிழர்களை உடனடியாகப் பிணையில் விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதென தமிழ்க் கட்சிகள் நேற்று (15) யாழ்ப்பாணத்தில் கூடி தீர்மானித்துள்ளன.
இதனடிப்படையில் நாளை (17) திங்கள்கிழமை ஜனாதிபதியை கொழும்பில் சந்தித்து பேசுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
இதில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி. விக்னேஸ்வரன், புளொட் தலைவர் த. சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா, ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் தலைவர் வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டுள்ள 8 தமிழர்களும் பிணையில் செல்ல முடியாதவாறு, தொல்லியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்பான அடுத்த வழக்கு தவணை எதிர்வரும் செவ்வாய்க் கிழமையாகும். அதற்கு முன்னதாக நாளை கொழும்பில் ஜனாதிபதி ரணிலைச் சந்தித்து, கைதான தமிழர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் மீதான குற்றப்பத்திரத்தில் மாற்றம் செய்து, உடனடியாக பிணை வழங்கும் ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அடுத்த கட்டமாக வெடுக்குநாறி மலை விவகாரத்தில் நிரந்தரமான தீர்வைக் காண, ஜனாதிபதியுடன் அடுத்த கட்டமாக பேசவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)