
posted 12th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
மனித புதைகுழி அறிக்கை 4 மாதங்களில்
மன்னார் - திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கில் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை 4 மாதங்களில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளை காபன் பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்கபட்டதாக சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணை நேற்று (11) திங்கட்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சி. ஐ. டியினரால் சட்ட மருத்துவ அதிகாரி கேவகேயின் அறிக்கை நான்கு மாதங்களில் தாக்கல் செய்யப்படும்.
திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள் காபன் பரிசோதனைக்காக அனுப்பப்பட இருந்த நிலையில் அதற்கான நிதி வசதியை செய்யுமாறு காணாமல் போனோருக்கான பணிமனையிடம் கேட்டதாகவும், ஆனால், அது தொடர்பில் உத்தரவாதம் அளிக்க காணாமல் ஆக்கப்பட்டோர் பணிமனை கால அவகாசம் கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை மீண்டும் மே 13 ஆம் திகதி அழைப்பதற்காக திகதியிடப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)