
posted 30th March 2024

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
தேனாரம் செய்தியாளர் தில்லைநாதனுக்கு “ஊடக தூது – 2024” விருது
யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரும், தேனாரம் இணைய வடமாகாண செய்தியாளருமான எஸ். தில்லைநாதன் “ஊடக தூது – 2024” விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.
கலாநிதி ரூபன் மரியாம்பிள்ளை அடிகளை பிரதம ஆசிரியராகவும், மரியதாஸ் நியூட்டனை துணை ஆசிரியர் மற்றும் இணைப்பாளராகவும் கொண்ட ஊடக தூது மடலின் இரண்டாவது வெளியீட்டுவிழா இன்று ஞாயிறு (31.03.2024) யாழ்ப்பாணம், கொழும்புத் துறையில் நடைபெறவிருக்கின்றது.
இந்த நிகழ்விலேயே வட மாகாண “தேனாரம்” செய்தியாளர் தில்லைநாதன் “ஊடக தூது மடல் - 2024” விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றார்.
பிசப்சவுந்தரம் மீடியா சென்ரர், பிசப் ஜஸ்ரின் மீடியா நூலகத்துடனான மீடியா றிசேச் சென்ரர் என்பன அடங்கிய 23 - 25 கடற்கரை வீதி பெரிய தோட்டம் வளாகத்தில் நிகழ்வு நடைபெறவுள்ளது.
மேலும், நிகழ்வில் ஊடக தூதுமடல் இரண்டாவது வெளியீட்டு விழாவுடன் இணைந்ததாக ஊடகவியல் கற்போம் - தமிழ்கத்தேலிக்க செய்தி வெளியீடும் லங்கா இணைய யூரியூப் தள திறப்பு விழாவும் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் கொழும்பு தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் வீரகத்தி தனபால சிங்கம் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வதுடன், “ஊடக தூதுமடல்” முதல் பிரதியையும் வெளியிட்டு வைப்பார்.
அத்துடன் “தினக்குரல்” வார இதழ் முன்னாள் பிரதம ஆசிரியர் பாரதி இராஜ நாயகம், ஊடக தூதுமடல் வெளியீட்டுரையும் ஆற்றுவார்.
சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு நிலை அதிபர் அ. சாள்ஸ் அரியகுமார் (ஆசியுரை), மூத்த ஊடகவியலாளர் சின்னத்துரை தில்லைநாதன், கோப்பாய், ஆசிரிய பயிற்சிக்கலாசாலை விரிவுரையாளர் வேல் நந்த குமார் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொள்வர்.
“ஊடக தூது மடல் - 2024” விருது பெறும் மூத்த ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் அண்மையில் ஊடகத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருதையும் கொழும்பில் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)