
posted 11th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
“எல்லாமும் ஒன்றல்ல” நாளை வெளியீடு
நாடறிந்த எழுத்தாளர் உமா வரதராஜனின் “எல்லாமும் ஒன்றல்ல” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை 12.03.2023 ஞாயிறு கல்முனையில் நடைபெறவிருக்கின்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பதிப்பாக வெளிவந்துள்ள இந்தநூலின் வெளியீட்டு விழா நிகழ்வு கல்முனை வியூகம் கலை, இலக்கிய அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.
பிரபல இலக்கிய கர்த்தா பேராசிரியர் செ. யோகராசா தலைமையில், கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை, நல்லதம்பி மண்டபத்தில் நிகழ்வு நடைபெறும்.
நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சரவண முத்து நவநீதன் நூல்வெளியீட்டுரையுடன் மூத்த ஊடகவியாலாளர் க. குணராசாவுக்கு முதற்பிரதிiயும் வழங்குவார்.
மேலும் இந்த வெளியீட்டு நிகழ்வில், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ், டாக்டர்.திருமதி. புஸ்பலதா லோகநாதன், கவிஞர் சோலைக்கிளி, மன்சூர் ஏ. காதர், சபா சபேஷன் வாசுதேவன், சிவ. வரதரஜன், சஞ்சீவிசிவகுமார், பி. சஜிந்ரன் ஆகியோர் உரையாற்றவுமுள்ளனர்.
இன்று இந்த நூல் வெளியீடு தொடர்பாக நூலாசிரியர் உமா வரதராஜனை பிறை எப்.எம். வானொலி நேர்காணல் ஒன்றை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
நூலாசிரியர் உமா வரதராஜன் பற்றிய விபரம்.
பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட இவர் சிறுகதை, கவிதை, விமர்சனம், பத்தியெழுத்து, நாடகப்பிரதி, நடிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பு, மேடைப் பேச்சு, நாவல் ஆகிய பிரிவுகளில் கடந்த 45 வருடங்களாக இயங்கி வருபவர்.
1988-89ல் வெளியான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான சாகித்திய மண்டலப் பரிசையும், விருதையும் வடக்கு - கிழக்கு மாகாண கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டுத் துறை இவருக்கு வழங்கியுள்ளது .
இந்திய சாகித்திய அகாடமி உட்பட கடல் கடந்த நாடுகள் சிலவற்றின் இலக்கியத் தொகுப்புகளில் இவருடைய படைப்புகள் சேர்த்துக் கொள்ளப் பட்டிருக்கின்றன.
இவரது சில படைப்புகள் ஆங்கிலம், ஜேர்மன், சிங்கள, தெலுங்கு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன .
இவருடைய சிறுகதையொன்று அரச பாடசாலைகளில் தரம் 10-11 க்கான 'தமிழ் இலக்கிய நயம்” பாடத் திட்டத்தில் 2015ல் சேர்த்துக் கொள்ளப் பட்டுள்ளது .
1980 களில் கல்முனையில் இயங்கிய 'புது மோடிகள் ' நாடகக் குழுவின் இயக்குனர்களில் ஒருவராகவும், நடிகராகவும் செயற்பட்டவர்.
இலங்கை ரூபவாஹினி மற்றும் நேத்ரா தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக விளங்கியவர் .
ஈழத்து இலக்கியச் சிற்றிதழ்களான காலரதம், களம் ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றியவர். தற்போது ‘வியூகத்தி’ன் பொறுப்பாசிரியர்.
70 களின் இறுதி ஆண்டுகளில் கல்முனை எழுத்தாளர் சங்கத்திலும் பின்னர் வியூகம் என்றோர் இலக்கிய அமைப்பிலும் செயற்பட்டவர். தற்போது பாண்டிருப்பு மறுமலர்ச்சி சன சமூக நிலையம் மற்றும் கல்முனை நெட் ஊடக வலையமைப்புடனும் இணைந்து இயங்குகின்றார்.
பத்தியெழுத்தாளராக ஈழத்தின் தேசியப் பத்திரிகைகள், இலக்கிய சிற்றிதழ்கள் மூலம் நன்கு அறியப் பட்ட இவர் தினகரன் வாரமஞ்சரியின் 'பிரதிபிம்பம் ' எனப்படும் கலை - இலக்கிய விவகாரங்களுக்கான பக்கத்துக்கு சிறிதுகாலம் பொறுப்பாகவிருந்தார் .
அவருடைய, வெளி வந்த நூல்கள்:
- உள்மன யாத்திரை ( அன்னம் பதிப்பகம், தமிழ்நாடு -1989) சிறுகதைத் தொகுப்பு
- மூன்றாம் சிலுவை (காலச்சுவடு வெளியீடு, தமிழ்நாடு - 2009) - நாவல்
- உமா வரதராஜன் கதைகள் (காலச்சுவடு வெளியீடு, தமிழ்நாடு - 2011)
- மோகத்திரை (காலச்சுவடு வெளியீடு, தமிழ்நாடு - 2019)
- இவ்வாண்டு வெளியாகவிருக்கும் நூல் : எல்லாமும் ஒன்றல்ல (கட்டுரைத் தொகுப்பு)

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)