
posted 22nd March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மக்கள் பிரச்சினைகளை ஆராய்ந்தார்
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் மருதமுனைக்கு விஜயம் செய்து மக்கள் பிரச்சினைகளை ஆராய்ந்தார்.
கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலியின் தலைமையில் கல்முனை பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட விசேட தீர்மானத்தின் அடிப்படையில் மருதமுனை 65 மீற்றர் சுனாமி வீடமைப்புத் திட்டத்தைக் கையளிப்பது தொடர்பில் ஆராய்வதற்காகவும், நீண்டகாலப் பிரச்னையாக இருக்கின்ற பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்புத் திட்டத்தின் கழிவு நீர் அகற்றல் பிரச்னை குறித்து தீர்மானம் மேற்கொள்வதற்காகவும் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டார்.
இதன்போது மருதமுனை 65 எம் வீடமைப்புத் திட்டத்தை எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் உரிய பயனாளிகளிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்முனை அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இது குறித்து முஷாரப் எம்.பியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பின்னர் வீடமைப்பு குறித்து, பிரதேச செயலாளரிடம் மேலதிக தகவலை பெற்ற கல்முனை அபிவிருத்தி குழு தலைவரான முஷாரப் எம்பி அடுத்த ஒரு வார காலத்துக்குள் பயனாளிகளின் பட்டியலை பூர்த்தி செய்யுமாறு பணிப்புரை விடுத்தார்.
அதன் அடிப்படையில் மருதமுனைக்கு விஜயம் செய்த முஷாரப் எம்.பி, 65 எம் வீடமைப்பு தொகுதிக்கு பிரதேச செயலாளருடன் விஜயம் செய்து அதனைப் பார்வையிட்டார்.
வீட்டுத் திட்டத்தின் நிலைமையை கண்டு ஆச்சரியமடைந்த அவர், முதலில் உரிய பயனாளிகளுக்கு வீடுகளை வழங்குவோம். நாட்டின் பொருளாதார நிலை சீரடைந்ததன் பின்னர் திருத்த வேலைகளைச் செய்து கொடுப்போம். அதற்கிடையில் முடியுமானவர்கள் வீடுகளை படிப்படியாக திருத்திக் கொள்ள முடியும். அவர்களுக்கு வீடுகள் சொந்தமானாலே தமது வீடுகளை திருத்தம் செய்ய முன்வருவார்கள் என்றார்.
சுனாமி இடம்பெற்று 19 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், இதுவரை உரிய பயனாளிகளுக்கு வீடுகளை கையளிக்காமல் இருப்பது ஆரோக்கியமான செயற்பாடு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)