தமிழ் மக்களின் அங்கீகரிக்கப்பட வேண்டிய கோரிக்கைகள்

தென்னிலங்கை ஐனநாயகப் போராளிகள் தமிழ் மக்களின் அரசியல் நீதி கோரிக்கையை அங்கீகரிக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந. சிறிகாந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

பாரிய பொருளாதார நெருக்கடி நிலையின் மத்தியிலும் இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடுவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முடிவெடுத்து நிற்கின்ற சூழ்நிலையில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை புறக்கணிக்கப்போவதாகவும் மனித உரிமை மீறல்கள் இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் காரணத்தினால் நாளை (03) மாலையில் இருந்து போராட்டம் நடத்தப் போவதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி மத்தியில் இவ்வாறான ஒரு கொண்டாட்டம் தேவைதானா? அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இதில் கலந்து கொள்ள முடியுமா? என்ற கேள்விகளை எல்லாம் எழுப்பி கத்தோலிக்க திருச்சபை இதனை புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருக்கின்றது.

பல்வேறு சிவில் அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியம் என்பன எதிர்வரும் 75ஆவது சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தியிருக்கின்றார்கள்.

பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து மட்டக்களப்பில் முடிவடையும் விதத்தில் ஒரு பாரிய பேரணிக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றது.
இந்த அழைப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வெளியிட்டிருக்கும் சூழ்நிலையில் சில கருத்துக்களை பொதுவெளியில் முன் வைப்பது பொருத்தமானது, அவசியமானது என்று கருதுகின்றோம்.

தமிழ் மக்கள் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிப்பது இது முதல்தடவையல்ல.

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் நீதி தொடர்பில் ஒரு திட்டவட்டமான நிலைப்பாட்டுக்கு தென்னிலங்கையில் ஐனநாயகத்தின் பெயரில் குரல் எழுப்புகின்ற, போராடுகின்ற அனைத்து முற்போக்கு சக்திகளும் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு இரண்டு வாரங்கள் போதும். ஆனால், இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக பகிரங்கமாக அறிவித்துள்ள சூழ்நிலையில் அது தொடர்பில் அரசாங்க தரப்பில் இருந்து பல்வேறு எதிர்ப்பு குரல்கள் இப்போது எழுந்து கொண்டிருக்கின்றன.

பதவியை விட்டு விரட்டி அடிக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தீவிர ஆதரவாளர்களாக கடைசிவரை இருந்தவர்கள் இப்பொழுதும் உள்ளனர். அரசாங்க தரப்பில் அமர்ந்துள்ளவர்கள் பலர் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறை முற்படுத்தப்படுத்துவதற்கு எதிராக போர்க்கொடி தூக்குகின்றார்கள்.

தென்னிலங்கையில் ஜனநாயக எழுச்சியை மீளக் கொண்டுவர தயாராக உள்ள இளைஞர், யுவதிகளுக்கும் அரசியல் நடவடிக்கையாளர்களுக்கும், தொழிற்சங்கவாதிகளுக்கும் ஒரு செய்தியை தாழ்மையாகவும் உறுதியாகவும் சொல்ல விரும்புகின்றோம்.

தமிழ் மக்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற முறையில் இந்த நாட்டில் ஆட்சியமைப்பு முறையை மாற்றி அமைப்பதற்கு சிங்கள முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து ஆதரவளிக்கவேண்டும்.

ஐனநாயகப் போராளிகளாக தென் பகுதியில் மக்கள் மத்தியில் உள்ளவர்கள் தமிழ் மக்களின் அரசியல் நீதி கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும்.

எனவே தமிழ் மக்களின் கோரிக்கையை அவர்கள் ஏற்காதவரையில் அவர்களின் ஜனநாயக ரீதியான எந்த ஒரு போராட்டத்திற்கும் தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்காது என்றார்.

தமிழ் மக்களின் அங்கீகரிக்கப்பட வேண்டிய கோரிக்கைகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)