
posted 13th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சேமிப்புப் பணம் வழங்க மறுப்பு - அதிகாரத் தோறனையில் அதிகாரியின் அவமதிப்பு
கல்வி ஊழியர்கள் சிக்கன கடன் கூட்டுறவு சங்கத்தில் அதிபர், ஆசிரியர்கள் மாதாந்தம் சேமித்து வந்த சேமிப்பு பணத்தை, ஓய்வுபெறும் நேரத்தில் வழங்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் அம்பாறை மாவட்ட பிராந்திய காரியாலயத்தில் இந்த சேமிப்புப் பணத்தை பெறுவதற்கு அதிபர்கள், ஆசிரியர்கள் கடந்த மூன்று மாத காலமாக அலைந்து திரிகின்றார்கள்.
அங்குள்ள முகாமையாளர் அதனை வழங்க நிதி இல்லை என்று கையை விரித்துள்ளார்.
கல்வி ஊழியர் சிக்கன கடன் கூட்டுறவுச் சங்கத்தில் மாதாந்தம் அதிபர்கள், ஆசிரியர்களால் செலுத்தப்பட்டு வந்த சந்தா சேமிப்புப் பணம் ஓய்வு பெறுகின்ற வேளையில் மொத்தமாக வழங்கப்படுவது வழமை.
ஆனால், கடந்த மூன்று மாத காலமாக ஓய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இந்த சேமிப்புப் பணத்தை வழங்க சங்கம் மறுப்பு தெரிவித்து வருகிறது.
அம்பாறை நகரில் உள்ள அம்பாறை பிராந்திய கல்வி ஊழியர் சிக்கன கடன் கூட்டுறவுச்சங்க அலுவலகத்தில் சென்று விசாரித்தபோது, "சேமிப்பு பணத்தை வழங்க எங்களிடம் பணம் இல்லை. நீங்கள் செய்வதைச் செய்யுங்கள்" என்று அங்குள்ள முகாமையாளர் பொறுப்பில்லாமல் பதிலை அளித்ததாக கடந்த மாதம் ஓய்வு பெற்ற சம்மாந்துறையைச் சேர்ந்த அதிபர் அமீர் அலி கவலையோடும் விரக்தியோடும் கூறினார்.
இதனால் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை பெற முடியாமல் அதிபர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சியும் விரக்தியும் அடைந்துள்ளனர் .
அதிபர்கள், ஆசிரியர்கள் தமது சேமிப்பை பொறுத்து மொத்தமாக சுமார் 80,000 தொடக்கம் ஒரு லட்ச ரூபாய் வரை சேமித்துள்ளனர்.
ஓய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு மாத காலமாக ஓய்வூதியமும் இன்னும் கிடைக்கப்பெறாமல் உள்ளது.
அதேவேளை சேமித்த பணத்தையும் பெறமுடியாமல் இவ்வாறு மறுக்கப்பட்டு வருவதால் அவர்கள் வாழ்க்கை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது. வாழ திண்டாடுகின்றனர். இது அவர்களது உரிமையையும் மீறுகின்ற செயல் என்று அதிபர் அமீர் அலி மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடப்போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, தற்போது மாதாந்த சந்தாப் பணத்தை செலுத்திவரும் அதிபர்கள், ஆசிரியர்கள் தமது மாதாந்த சந்தா பணத்தை இந்த மாதத்தில் இருந்து நிறுத்தப் போவதாகவும், இனிமேல் சந்தா செலுத்தப் போவதில்லை என்றும் அந்தந்த வலயக் கல்விப் பணிமனையின் கணக்காளர்களுக்கு அறிவித்து வருகின்றார்கள்.
கஷ்டப்பட்டு தான் சேமித்த பணத்தை மீளப்பெற முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்ற இந்த வேளையில் நாம் ஏன் சந்தா செலுத்தவேண்டும்? என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)