
posted 2nd March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நில கண்ணிவெடிகள் மற்றும் அபாயகரமான வெடி பொருட்கள் காணப்படும் பிரதேசங்களுக்கு அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யுத்த காலத்தில் சூனியப் பிரதேசமாக இருந்த முகமாலை பகுதியில் நில கண்ணிவெடிகள் மற்றும் அபாயகரமான வெடிபொருட்கள் காணப்படுகின்றன.
யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் ஆகின்றபோதிலும் , அப்பகுதியில் தற்போதும் வெடிபொருட்களை அகற்றும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் அப்பகுதிகளுக்குள் பொதுமக்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் உள்நுழையும் மணல் கொள்ளையர்கள் தனியார் காணிகளுக்குள் நுழைந்து மணல் அகழ்வுகளில் ஈடுபடுகிறனர்.
வெடிபொருள் அபாயத்தினால் விடுவிக்கப்படாத தனியார் காணிகளுக்குள் மணல் அகழ்வதினால் காணிகளுக்குள் பாரிய அளவில் பள்ளங்கள் காணப்படுகின்றன.
அதேவேளை, சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களால், வெடி பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும்போது வெடி பொருட்கள் ஏதேனும் வெடித்தால் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் அவயங்களை இழக்கவேண்டி ஏற்படும். சில வேளைகளில் உயிரை இழங்கவேண்டி ஏற்படும்.
எனவே அபாயகரமான பகுதிகளுக்குள் ஊடுருவி மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)