
posted 21st March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
காதலில் விரக்தியுற்ற மாணவன் தன் உயிரை மாய்த்துக்கொண்டான்
மன்னார் மாவட்டத்தில் தொழில் நுட்பக் கல்லூரி ஒன்றில் கல்விக் கற்றுக்கொண்டும் பகுதி நேரங்களில் வீடு வீடாகச் சென்று பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த மாணவன் ஒருவன் காதல் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் மன்னார் வங்காலை பகுதியில் ஞாயிறு (19) காலை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மரண விசாரணையில் தெரியவருவதாவது;
வங்காலை 10ஆம் வட்டரத்தைச் சேர்ந்த தேவ தீபன் நியூமன் சோசை (வயது 24) என்ற இளைஞன் மன்னார் பண்ணவெட்டுவான் பகுதியிலுள்ள ஒரு தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி கற்று வந்தவர். அத்துடன் பகுதி நேர தொழிலாக வீடு வீடாகச் சென்று பொருட்கள் விற்பதிலும் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளார். இந்த வேளையில் இவர் தனது சக மாணவியுடன் காதலிலும் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (18) இரவு இவர் தனது காதலியுடன் மது போதையில் உரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சம்பவம் அன்று, ஞாயிறு (19), இவரின் தந்தை திருப்பலிக்கும், தாயானவர் தனது உறவினர் வீட்டுக்குச் சென்ற பின்னர் வீட்டில் எவரும் இல்லாத சமயத்தில் தனது வீட்டு அறைக் கூரையில் தூக்கு கயிறு போட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இச் சம்பவம் காலை 7 , 7.30 மணியளவில் இறந்தவரின் தந்தை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது இவர் தூக்கிலிட்டு இருந்ததைக் கண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின் இவரின் மரணம் தொடர்பாக மன்னார் மரண விசாரணை அதிகாரி எஸ்.ஈ. குணகுமார் விசாரணையை மேற்கொண்ட போது இறந்தவரின் பெற்றோர் சாட்சியம் அளித்துள்ளனர். காதலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளாலே இவர் தற்கொலை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண விசாரணை மற்றும் உடற்கூற்று பரிசோதனைக்குப் பின்னர் இவரின் சடலம் இவரின் உறவினரிடம் ஞாயிற்றுக் கிழமை (19) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)