
posted 26th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கட்சியின் நிலைப்பாடு
காலம் தாழ்த்தாது உரிய வேளையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதுவே எமது கட்சியின் நிலைப்பாடு இந் நிலைப்பாட்டில் நாங்கள் மிக உறுதியாக இருக்கின்றோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணையகத்தில் நடைபெற்ற கட்சிச் செயலாளர்களுடனான கூட்டத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்:
உள்ளூராட்சி மன்ற தேர்தல் மூலம் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்பதற்கு அப்பால் ஜனநாயகத்தை இந்த நாட்டில் கேலி கூத்தாக மாற்றிவிடக்கூடாது. தொடர்ந்தும் தேர்தலை பிற்போடப்படுவதென்பது ஏற்றுக்கொள்ளகூடிய விடயம் அல்ல. தேர்தல் நடாத்தப்படவேண்டும் என்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரும் அவரோடு இணைந்த தேர்தல் ஆணைக்குழுவும் மிகச் சிரமப்பட்டுக்கொண்டிருப்பதை நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் அது மிகவும் மனவேதனைக்குரிய விடயமாக இருக்கின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டதனைப்போன்று கடந்த காலங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை தவிர்க்கமுடியாத காரணங்களால் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டுக்கொண்டு செல்வதென்பது நிச்சயமாக ஜனநாயகத்திற்குரிய சாவு மணியாக பார்க்கப்படுகின்றது. ஆகவே, இங்கு இருக்கின்ற 59 அரசியற்கட்சிகளில் ஓரிரு அரசியற் கட்சிகளை விட அனைத்து அரசியற் கட்சிகளும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது.
அதேபோன்று தேர்தல் ஆணைக்குழுவும் கட்சி செயலாளர் என்ற ரீதியில் எங்களால் எவ்வாறான பங்களிப்பினை செய்ய வேண்டும் என்பதனை நீங்கள் குறிப்பிடுங்கள். நாளை மீண்டும் ஒரு மக்கள் புரட்சி வந்து அதன் மூலம் தேர்தலை கொண்டு வர முற்படுவது என்பது நாட்டின் இறைமைக்கு நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் கேள்வி குறியாக தடையாக மாறிவிடும்.
அது மாத்திரம் அல்ல நாட்டில் பொருளாதர ரீதியான நெருக்கடி இருக்கின்றது என்பது உண்மைதான். அதனை தீர்த்துக்கொள்கின்ற அதே வேளையில் ஜனநாயகத்திற்கான நெருக்கடி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நாங்கள் மிக உறுதியாகஇருக்கின்றோம்.
மாகாணசபை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் அதிகாரிகள் ஆட்சியின் காரணமாக நிர்வாகங்களை ஒழுங்காக கொண்டு செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று இன்று நீங்கள் தேர்தலை ஒத்திவைப்பது காரணமாக ஆலய கூட்டங்கள் உட்பட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எங்களது மாகாணங்களில் அதிபர்களை நியமிப்பது ஆசிரியர்களை சமப்படுத்துவது அதிகாரிகளை உரிய இடங்களில் இடமாற்றம் செய்வதென்கின்ற பாரிய பிரச்சனை இருக்கின்றது.
அதற்காக ஆணைக்குழுவிடம் அனுமதி பெறவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக பாடசாலைகளில் ஆசிரியர்களை சமப்படுத்துவதற்கான கடிதம் வரையப்பட்டு அதற்கான அனுமதி இன்னும் கிடைக்கபெறவில்லை. பாடசாலை மாணவர்களின் கல்வி என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
ஆகவே, இவ்வாறான சூழல் தேர்தலை ஒத்திவைப்பதன் காரணமாக ஏற்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல தேர்தலில் போட்டியிடும் அரச அதிகாரிகளுக்கு சம்பளக் கொடுப்பனவும் இல்லை. அதேபோன்று தனியார் நிறுவனங்களின் குறிப்பாக ஆடையகங்களில் வேலை செய்கின்ற பல தொழிலாளிகள் தேர்தலுக்காக களம் இறங்கினார்கள். அவர்கள் மூன்று, நான்கு மாதமாக சம்பளம் கூட இல்லாமல் இருக்கின்றார்கள். அவரது குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே, இதற்கு தீர்க்கமான முடிவெடுக்கப்படவேண்டும். நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)