
posted 19th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஐந்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு
நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேச கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்காக ஆரம்ப நிதியாக நிந்தவூர் பிரதேச சபையினால் ஐந்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிந்தவூர் பிரதேச சபையின் 60ஆவது சபை அமர்வு நிந்தவூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் கௌரவ தவிசாளர் எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர் தலைமையில் இடம்பெற்றது.
சபையின் வழமையான நடடிக்கைகளை தொடர்ந்து நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்பு குறித்து அப்பிரதேச வாசிகள் தனக்கு மகஜர் ஒன்றை கையளித்ததாகவும், குறித்த கடலரிப்பிற்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரியதாகவும் தவிசாளர் பிரேரனையொன்றை முன் வைத்திருந்தார். அதன் பிரகாரம் ஒலுவில் துறைமுகத்திலுள்ள பாறாங்கற்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் முதற்கட்டமாக வேலைகளை ஆரம்பிப்பதற்கு பிரதேச சபையினால் ஐந்து இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும் சபை உறுப்பினர்களினால் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சபை அமர்வானது இறுதி அமர்வென்பதினால் சபையின் கௌரவ உறுப்பினர்களின் பிரியாவிடை உரை நிகழ்த்தியிருந்தனர். கடந்த காலங்களில் கௌரவ தவிசாளரின் வழிகாட்டலில் இச்சபை சிறப்பாக வழிநடாத்தப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்றிருந்தமையை சகல உறுப்பினர்களும் மேற்கோள் காட்டி பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சபையினுடைய செயற்பாடுகள் அனைத்தும் ஊரின் நன்மை கருதியே அமைந்திருந்தது. எந்தவொரு கட்சியைப் பிரதிபலிக்கும் செயற்பாடுகளாகவோ அல்லது கட்சியின் ஆதரவாளர்களின் நலனை முதன்மைப்படுத்தியதாகவோ அமைந்திருக்கவில்லை. ஊரின் நலனில் அக்கறை கொண்டு மூன்று கட்சி உறுப்பினர்களும் வழங்கிய ஒத்துளைப்பினால்தான் நிந்தவூர் பிரதேச சபை முதல் நிலை வகிக்கின்றது எனத் தவிசாளர் தாஹிர் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)