
posted 10th February 2023
மட்டக்களப்பு மாநகரசபையில் நிதிக்குழு அறிக்கையை கிழித்தெறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் உட்பட பிரதி முதல்வர் ஆகியோர் சபை வெளிநடப்பு செய்தமையினால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபையின் இறுதி அமர்வு மாநகரசபையின் முதல்வர் தி. சரவணபவன் தலைமையில் வழமையான சம்பிரதாயங்களுடன் ஆரம்பமானது.
இதன்போது மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தலைமையுரையை தொடர்ந்து நிதிக் குழுவின் அறிக்கையை சமர்ப்பித்து அதற்கு சபையின் அனுமதியை கோரினார்.
குறித்த நிதிக்குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளமுடியாது.. அது வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டும் எனவும் நிதிக்குழுவின் பங்குபற்றல் இல்லாமல் முதல்வரினால் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
எனினும், குறித்த அறிக்கை மாநகரசபையின் கட்டளைச் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த குழுவின் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்குமாறும் முதல்வர் கோரினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்களும் ஏனைய சுயேச்சைக் குழு உறுப்பினகளும் குறித்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் வாக்கெடுப்பும் கோரினர்.
இதன்போது சபையில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கடுமையான வாக்குப் பிரதிவாதகளும் இடம்பெற்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர் ஜெயச்சந்திரன் நிதிக்குழுவின் அறிக்கையை கிழித்தெறிந்து சபையை விட்டு வெளியேறிச் சென்றார்.
இதன்போது தமிழீழ விடுதலை இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி முதல்வர் க. சத்தியசீலன், புளொட் கட்சி உறுப்பினர், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள், சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் என பலர் சபையிலிருந்து வெளியேறிச் சென்றனர்.
ஆனாலும், சபை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றன. 38 உறுப்பினர்களைக் கொண்ட மட்டக்களப்பு மாநகர சபையில் இறுதியாக சபையில் 14 உறுப்பினர்களேயிருந்த நிலையில் நிதிக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் ஏனைய விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)