
posted 7th March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
“ஜனநாயக விழுமியங்களைப் பேண வேண்டிய ஜனாதிபதி, உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தைப் பாதுகாக்க முன்வரவேண்டும். இதன் மூலம் நாட்டில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு தொடர்ந்தும் இடமளிக்காது முற்றுப்புள்ளிவைக்க வேண்டும்” இவ்வாறு, இலங்கை ஜனநாயக முன்னணி, ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள அவசர கடிதம் ஒன்றில் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை ஜனநாயக முன்னணி சார்பில் அதன் தலைவர் அல் - ஹாஜ் ஏ.பி கமால்டீன் இந்த கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இன்று நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர் வலைகள் தொடர்பில் தெளிவுபடுத்தியும், தேர்தலைப் பிற்போடமுனைய வேண்டாமென வலியுறுத்தியும் தலைவர் கமால்டீன் மேற்படி அவசரக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.
இந்த அவசரகடிததத்தில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டடுள்ளது.
இது ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் ஆட்சிக்காலம் முடிவடையும்.. உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், தேர்தலை உரிய வேளையில் நடத்துவதற்கு முட்டுக்கட்டைகள் போடப்பட்டு மக்கள் மத்தியில் விமர்சனப்பார்வைகள் மேலோங்கி வருகின்றன.
ஜனாதிபதியும், அரசும் தேர்தலைப் பிற்போடுவதற்கு நொண்டிச் சாட்டுக்களைக் கூறிக் கபட நாடகம் ஆடுவதாக இந்த விமர்சனங்கள் பறைசாற்றுகின்றன.
இதனால் நாட்டு மக்கள் பெரும் அங்கலாய்ப்புக்குள்ளாகியுள்ளது மட்டுமன்றி ஜனாதிபதியாகிய தங்கள் மீதும் அரசு மீதும் மக்கள் கொண்ட நம்பிக்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
எனவே இந்த விடயத்தில் கௌரவ ஜனாதிபதியாகிய நீங்கள் நிதானமாகவும், நேர்மையாகவும், சிந்தித்து நாட்டின் ஸ்திரத்தன்மையையும், கௌரவத்தையும், ஜனநாயக விழுமியங்களையும் பேணிக்காக்கும் பொறுப்பை உணர்ந்து ஆக்க பூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க முன்வர வேண்டும்.
இந்த வகையில் எழுந்துள்ள விமர்சனங்களையும், மக்கள் போராட்டங்களையும் தொடர விடாது உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இனியும் தாமதியாது உரிய வேளையில் நடத்தப்பட ஆவன செய்வதுடன், நாட்டின் ஸ்திரத்தன்மையையும், கௌரவத்தையும், ஜனநாயக விழுமியங்களையும் பேணிப்பாதுகாக்க வேண்டிய பொறுப்பை இதன் மூலம் நிறைவேற்றுமாறும் எமது முன்னணி சார்பாகக் கோருகின்றோம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)