
posted 23rd March 2023
தூங்கிடும் நம் உறவுகளின் துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வாழ்வாதாரம் தாக்கப்பட்டதால் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்த மீனவ சமூகம்
வடக்கு மாகான மீனவர்கள் ஒன்றிணைந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று 23ம் திகதி வியாழக்கிழமை மன்னாரில் மேற்கொண்டனர்.
இப் போராட்டமானது, வடக்குக் கடல் பகுதியில் வரி அறவீடு செய்து இந்திய மீனவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு குத்தகைக்கு வழங்குவது மற்றும் இந்திய மீனவர்களின் தொடர்ச்சியாக இலங்கைக் கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதைக் கண்டித்தும் இம் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று நண்பகல் 12 மணிவரை நடைபெற்றது.
இந்த போராட்டமானது காலை 10 மணயளவில் மன்னார் நகர சபை பொது விளையாட்டு மைதானத்தில் அரம்பிக்கப்பட்டு மன்னார் மருத்துவமனையின் பிரதான பாதையூடாகச் சென்று மன்னார் புதிய பேருந்து நிலையத்தில் நண்பகல் 12 மணியளவில் நிறைவுபெற்றது.
இப் போராட்டத்தில், மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள், மீனவ சமாஜத்தின் நிர்வாகத்தினர், மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ, மன்னார் பிரஜைகள் குழு, மதத்தலைவர்கள், மீனவ சமூகத்தினர் ஒன்று கூடி இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தில் கலந்து கொண்ட மன்னார் ஆயர், மாவட்ட மீனவ பிரதிநிதிகள் ஆகியோர் உரையாற்றினர்.
இதைத் தொடர்ந்து, மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் ஊடாக மன்னார் அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது
இப்போராட்டத்திற்கு ஆதரவாக;
- மீனவ கிராமங்களில் கடைகள் யாவும் மூடப்பட்டன
- மீனவர்கள் கடற்தொழிலைப் புறக்கணித்தனர்
- பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகம் அளிக்கமுடியாமல் தடைப்பட்டது
- தனியார் வாகன போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டது
- வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டன
இவ்வாறாக, மக்களும், ஸ்தாபனங்களும் மீனவ சமூகத்துடன் இணைந்து இயல்பு நிலை பாதிக்கப்படுமளவிற்கு போராட்டத்தில் குதித்திருப்பார்களானால் அவ்வளவிற்கு அவர்கள் பாதிக்கப்பட்டள்ளார்கள் என்பது புலனாகின்றது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)