
posted 1st March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மக்களாணை இழந்த ஆட்சியாளர்கள், மக்களாணைக்கு அஞ்சுகிறார்களா? என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ சிறீ நேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 பாராளுமன்றத் தேர்தலி்ல் படுதோல்வி அடைந்த தற்போதைைய ஜனாதிபதி ரணில் தனது கட்சி சார்பாக ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தைப் பெற்றார். அந்த தேசியப்பட்டியல் ஆசனம் மூலமாக காலம் தாழ்த்தி சங்கடத்துடன் பாராளுமன்றத்தினுள் அவர் நுழைந்தார். முன்னாள் ஜனாதிபதி கோத்தா மற்றும் மொட்டுக் கட்சியினரின் தவறான சமூக பொருளாதார அரசியல் சார்ந்த எதேச்சையான போக்குகளால், மக்களின் கிளர்ச்சி மூலமாக கோத்தா பதவி இழந்தார்.
மின்தடை, எரிபொருள் தட்டுப்பாடு, பணவீக்கம், பொருட்கள் தட்டுப்பாடு, அசுர விலையேற்றம் போன்ற விடயங்கள் ராஜபக்ச ஆட்சியாளர்கள் மக்களாணையை இழக்க வழிகோலின ஆட்சியாளர்களின் பலவீனமான செயற்பாடுகள் ரணில் அவர்களுக்கு பலத்தை அளித்தது. அதனால் ரணில் பிரதமராகிப் பின்னர் மக்களாணை இல்லாமல், பாராளுமன்றம் மூலமாக ஜனாதிபதியுமானார். இது ஆச்சரியமான நிகழ்வாகும்.
தற்போதைய நிலையில் ஜனாதிபதி மற்றும் ராஜபக்ச தரப்பினர் மக்களளாணையை இழந்து நிற்பதை அறிய முடிகின்றது.
அண்மையில் 2023 ஜனவரி மாதத்தில் இலங்கை சுகாதாரக் கொள்கை நிறுவகம் (Institute of health policy sri lanka) மேற்கொண்ட மாதிரி அபிப்பிராய வாக்கெடுப்பு ஆய்வின் முடிவு பின்வருமாறு அமைந்தது. அந்தவகையில் ஜேவிபி 32 வீதம், ஐக்கிய மக்கள் சக்தி 31 வீதம், ஐக்கிய தேசியக்கட்சி 9 வீதம், பொதுஜனப்பெரமுன 8 வீதம், தமிழரசுக்கட்சி 5 வீதம், சுதந்திரக்கட்சி 1வீதம் என்றும், இதர கட்சிகள் 14வீதம் என்ற வகையிலும் அந்தத் தகவல் அமைந்தது. இந்த ஆய்வறிக்கை ஜனாதிபதி மற்றும் மகிந்த தரப்பை அச்சமடையச் செய்திருக்கலாம். அதன் விளைவாக தேர்தலை ஜனாதிபதி ஒத்தி வைத்துள்ளார் என அறியப்படுகிறது. உள்ளூராட்சித் தேர்தலி்ல் மக்களாணை ஆட்சியாளர்களுக்கு எதிராக அமைந்தால், அடுத்து பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித்தேர்தல் என்பவற்றை நடாத்துமாறு, புதிதாக உள்ளூராட்சி சபைகளில் ஆணை பெற்ற கட்சிகள், மாற்றத்தை விரும்பும் மக்கள் பலமான பேரெழுச்சிகளை மேற்கொள்வர். அதனை ஆட்சியாளர்களால் எதிர்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். இதனை ஆழமாகப் புரிந்த ஜனாதிபதி உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஆப்பு வைத்துள்ளார் என்பதே உண்மையான நிலைமையாகும். உள்ளூராட்சித் தேர்தலைத்தடுத்து நிறுத்தும் நோக்குடன் ஜனாதிபதி ஆற்றிய பாராளுமன்ற உரை, சுமார் 85 சதவீதமான மக்களை எரிச்சலூட்டுவதாக அமைந்தது. அவரது பேச்சு பொறுப்புணர்ச்சியோடு அமையாமல், நகைப்பும், நையாண்டியும் கலந்ததாக இருந்தது. மக்களை ஏமாளிகளாக்கும் கோமாளித்தனமான பேச்சாக அது அமைந்தது. மேலும், தனது அதிகாரத்தினால் சுயாதீன தேர்தல் ஆணையத்தையும் செயலிழக்கச் செய்ய முடியும் என்பதை அப்பேச்சு வெளிப்படுத்தியது.
அதிகாரங்கள், கதிரைகள் என்பவை தற்காலிகமானவை என்பதை ஏறத்தாழ அரை நூற்றாண்டு பாராளுமன்ற அனுபவமுள்ள ஜனாதிபதி ரணில் அறியாமல் இருப்பதுதான் ஆச்சரியமாகவுள்ளது. 2020 தேர்தலி்ல் தன்னையும், தனது கட்சியையும் சீறோவாக்கிய ரணில், ராஜபக்சக்களின் அறிவீன செயற்பாடுகளால் ஹீறோவானார்.
இப்போது தனது மாமா ஜெயவர்த்தனவாக மாறி, அதிகாரத்தை உச்சமாக சுவைக்க ஆரம்பித்து விட்டார். இதற்கான எதிர்வினை, மக்கள் எழுச்சியாக, கிளர்ச்சியாக இறுதியில் மக்கள் தீர்ப்பாக மாறும் என்பதை ஜனாதிபதி அறிந்தே தீருவார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அவர்கள் கூறியது போல் மொட்டுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாத்தல், அவர்களுக்கு நட்டஈடு வழங்குதல், தேர்தலை நடத்தாமல் தவிர்த்தல் என்பவையே ஜனாதிபதியின் பிரதான முத்தொழில்களானதோ என்று மக்களை சிந்திக்க வைத்துள்ளது. இதற்கான பதிலை மக்களும், எதிர்க் கட்சிகளும் விரைவாக அளிப்பார்கள் என்பதை எதிர்காலம் உணர்த்தும். அதிகாரத்தை சுவைத்தவர்கள் அதனை இழந்த பின்னர் அல்லற்படுவார்கள் என்பதை கோத்தா ஈராண்டுகளில் உணர்ந்தார். தற்போதைய ஜனாதிபதியும் உணர்ந்தேயாவார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)