சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனம்

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்திய மட்டக்களப்பு நோக்கிய பேரணி நேற்று (04) யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து பல நூற்றுக்கணக்கானவர்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.

முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமான இந்தப் பேரணி நாச்சிமார் கோயிலை அடைந்து அங்கிருந்து காங்கேசன்துறை வீதி வழியாக யாழ். நகரை அடைந்து தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் கச்சேரியை அடைந்தது.

அங்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தொடர்ந்து செம்மணியை அடைந்தனர். அங்கு இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்திக்கு அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து ஏ- 9 நெடுஞ்சாலை வழியே சாவகச்சேரி நகரத்தைத் தொடர்ந்து வாகனங்களில் பேரணி ஆரம்பமானது.

சாவகச்சேரி நகரப் பகுதியில் மக்களின் ஆதரவுக்கு மத்தியில் நகர்ந்த பேரணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் சிலைக்கு முன்பாக அஞ்சலி செலுத்தியது. இதைத் தொடர்ந்து நகர்ந்த பேரணி பரந்தனை அடைந்து கிளிநொச்சி நகரை அடைந்தது.

நகரப் பகுதியை அடைந்ததும் நடைபயணமாக ஆரம்பித்த பேரணியுடன் கந்தசுவாமி கோயிலில் காத்திருந்த பலநூறு மக்கள் இணைந்தனர். இந்தப் பேரணி கோஷங்களை எழுப்பியவாறு இரணைமடு சந்திவரை நகர்ந்தது. இரவு 7 மணியளவில் இரணைமடு சந்தியில் போராட்டம் நிறைவடைந்தது.

நீண்ட இந்தப் பேரணி இராணுவ முகாம்களின் அருகே சென்றபோது, இராணுவமே வெளியேறு என்று முழக்கமிட்டது. பேரணி நகர்ந்தபோது இராணுவத்தினர், பொலிஸார், புலனாய்வு பிரிவினர் என்று பலர் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டனர். அத்துடன், போராட்டக்காரர்களை காணொலி, ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் தவத்திரு வேலன் சுவாமிகள், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சிறீதரன் மற்றும் எம். கே. சிவாஜிலிங்கம், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அரசியல்வாதிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)