
posted 29th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
காங்கேசன்துறை காரைக்கால் படகுச் சேவை
இந்தியாவின் புதுச்சேரியிலுள்ள காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன் துறைக்கும் இடையில் ஆரம்பிக்கப்படவிருக்கும் பயணிகள் படகுச் சேவையின் பயனைக் கிழக்குவாழ் மக்களும் அனுபவிக்கும் வண்ணம் கிழக்கிலிருந்து, காங்கேசன் துறைக்கு நேரடி இணைப்பு போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க ஆவன செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஐ.எல்.எம். மாஹிர், துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றில் இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
இந்த படகுச் சேவை மூலம் கிழக்கிலுள்ள வர்த்தகர்களும் இலகுவாகத் தமது இந்தியாவுடனான வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், மற்றும் உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தி, திருத்தலயாத்திரைகளுக்கான இலகு வசதிபோன்ற வாய்ப்புக்கள் கிடைக்கவுள்ளன.
இந்தப் பயன்கள் கிழக்கு மக்களுக்கும் கிடைப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டுமெனத் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள தவிசாளர் மாஹிர், குறித்த படகுச் சேவைகள் இடம்பெறவிருக்கும் தினங்களை மையப்படுத்தி மட்டக்களப்பிலிருந்து காங்கேசன் துறைக்கான நேரடி இணைப்பு ரயில் சேவைகளை ஆரம்பிக்க ஆவன செய்யுமாறும், இதே அடிப்படையில் கிழக்கின் முக்கிய நகரங்களிலிருந்து குறிப்பிட்ட தினங்களில் காங்கேசன் துறைக்கான போக்குவரத்து பஸ் சேவைகளை ஆரம்பிக்க அமைச்சர் ஆவன செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இச்சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் கிழக்கு மாகாண மக்களுக்கு குறித்த படகுச் சேவையின் பயனை அனபவிக்க முடியுமெனவும் முன்னாள் தவிசாளர் மாஹிர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தவிரவும், இந்தியாவின் புதுச்சேரியிலுள்ள காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன் துறை துறை முகத்திற்கும் இடையிலான படகுச் சேவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி முதல் ஆரம்பமாகுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி காரைக்கால்துறை முகத்திலிருந்து காங்கேசன் துறை, துறைமுகத்திற்கு குறித்த தினத்தில் (ஏப்ரல் - 29) புதிய படகுச் சேவையின் முதல் படகு வருகை தருமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தப் படகுச் சேவையை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், புதிய பயணிகள் முனையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதற்காக துறைமுக அதிகாரசபை 144 மில்லியன் ரூபா நிதியினைப் பெற்றுக்கொடுத்துள்ளதுடன், அதற்கான நிர்மாணப் பணிகள் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தப் படகுச் சேவையின் ஒரு வழிப்பயணத்திற்கு பயணி ஒருவரிடமிருந்து 50 டொலர்களை (சுமார் 16 ஆயிரம் ரூபா) அறவிடப்படுவதுடன், 100 கிலோ கிராம் பொருட்களை பயணி ஒருவர் கொண்டுவர அனுமதிக்கப்படுவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு படகில் ஒரே தடவையில் 150 பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவரெனவும், காரைக்கால் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு நான்கு மணி நேரத்தில் படகு காங்கேசன் துறையை வந்தடையுமெனவும் மேலும் தெரிவிக்க்பபட்டுள்ளது.
முதல் கட்ட நடவடிக்கைகளின் போது, பகல் நேரங்களில் மட்டுமே இந்த பயணிகள் படகுச் சேவை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தப் பயணிகள் படகுச் சேவை ஆரம்பிக்கப்படவிருப்பது குறித்து தவிசாளர் மாஹிர் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்துள்ளதுடன் அமைச்சருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)