
posted 27th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
அழிக்கப்பட்ட ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம்
தொல்பொருள் திணைக்களத்தின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழுள்ள வவுனியா - நெடுங்கேணி - வெடுக்குநாறிமலையில் அமைந்திருந்த ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது.
அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிசிவலிங்கம் முழுமையாகப் பெயர்க்கப்பட்டு உடைத்து வீசப்பட்டுள்ளது. இதேபோன்று, அங்கிருந்த விநாயகர், அம்மன் சிலைகள் பெயர்த்து அகற்றப்பட்டுள்ளன. அத்துடன், அங்கிருந்த சூலங்களும் பிடுங்கி எறியப்பட்டுள்ளன.
நேற்று (26) ஞாயிறு தினம் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு பூசைக்காக சென்ற பூசகரும், அந்தக் கிராமத்தின் மக்களும் ஆலயத்தில் இருந்த விக்கிரகங்கள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய தேடுதலிலேயே ஆதிலிங்கம் பெயர்த்து வீசப்பட்டமை தெரிய வந்தது. இதைத் தொடர்ந்தே இந்த விடயம் வெளிவந்தது.
இனந்தெரியாத நபர்களே இந்த அடாத்தான செயலில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகின்றது.
இதேநேரம், தமிழர்களின் ஆதி தொட்டு வழிபட்டுவந்த வெடுக்குநாறி மலை பௌத்த தொல்லியல் இடம் என்றுகூறி தொல்பொருள் திணைக்களம் அந்த இடத்தை சுவீகரித்தது. ஆதிசிவன் ஆலயத்தில் வழிபாட்டை நிறுத்த பல தடைகள் ஏற்படுத்தப்பட்டு, பூசை வழிபாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே, தடையை மீறி பூசைகளை முன்னெடுக்க முயன்ற ஆதிசிவன் ஆலய நிர்வாகம் மீது தொல்பொருள் திணைக்களத்தினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். தொல்பொருட்களை சேதப்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் நிர்வாகத்தினர் மறியலில் வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)