
posted 15th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
அட்டப்பள்ளம் பிரதேசத்தில் உக்கிரமமான கடலரிப்பு
நிந்தவூர் பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்டதும், பாரம்பரியமாக பெரும்பான்மை தமிழ் மக்கள் வாழும் பிரதேசமுமான அட்டப்பள்ளம் பகுதியில் தற்சமயம் கடலரிப்பு உக்கிரமடைந்துள்ளது.
இதனால் பிரதேச கடற்கரையை அண்டியுள்ள தென்னம் தோட்டங்கள் கடலால் காவு கொள்ளப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதுடன், அண்மித்த சுற்றுலா ஹோட்டல்களும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக இக் கடலரிப்பு காரணமாக கடல் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவரும் கடற்றொலிலாளர்களும், மற்றும் பொது மக்களும் பாதிப்புக்கள்ளாகியுள்ளனர்.
தற்பொழுது ஏற்பட்டுள்ள அட்டப்பள்ளம் பிரதேச கடலரிப்பு அனர்த்தம் தொடர்பில், குறித்த பிரதேச தென்னம் தோட்ட மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், கடற்றொழிலாளர்கள், பொது மக்கள் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து தவிசாளர் தாஹிர் பாதிக்கப்பட்டுள்ள தோட்ட உரிமையாளர்கள், கடற்றொழிலாளர்கள், பொது மக்களுடனான அவசர சந்திப்பொன்றில் கடலரிப்பு அனர்த்த பாதிப்பு நிலை தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன் நிலமையை நேரிலும் பார்வையிட்டார்.
அட்டப்பள்ளம் ஹாப் மூன் ரிஷொட் மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பின் போது, அவசரமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பலரும் தவிசாளர் தாஹிரிடம் வலியுறுத்தியதுடன், கடலரிப்பிற்கான நிரந்தரத் தீர்வினைப் பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இச்சந்திப்பின் போது அட்டப்பள்ளம் ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலய நிருவாகத்தினரால் இது விடயமான மகஜர் ஒன்றும் தவிசாளரிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் தவிசாளர் தாஹிர் இந்த சந்திப்பையடுத்து, அனர்த்த முகாமைத்துவமாவட்ட உதவிப்பணிப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள அதேவேளை, கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளை நேரில் அழைத்து வந்து அனர்த்த நிலமையைக் காண்பித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஆவன செய்துள்ளார். அட்டப்பள்ளம் பிரதேச கடலரிப்பு அனர்த்தத்திற்கு நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தாம் முனைப்புடன் மேற்கொண்டு வருவதாகவும் தவிசாளர் தாஹிர் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)