
posted 31st March 2022
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசுக்கு எதிரான கண்டனப் பேரணி திட்டமிட்டபடி ஏப்ரல் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை தென்கிழக்கின் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறுமென கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
நாட்டில் இன்றைய நிலையில் ஏற்பட்டுள்ள பாரிய விலைவாசி ஏற்றம், அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருட்கள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு, மின்சார நெருக்கடி போன்றவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு, வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ள நிலையில், மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்தி, இதற்கான உடனடித்தீர்வை வழங்குமாறு அரசை வலியுறுத்தும் வண்ணம் இந்தபாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆவது அரசியலமைப்புத்திருத்ததிற்கு கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக ஆதரவளித்து, இன்றைய அரசுக்கு முட்டுக்கொடுத்து ஆதரவளித்துவரும் அரசியல் சூழலில் திடுதிப்பென, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு இல்லாமல் ஏன் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இந்த செயற்பாட்டை முன்னெடுத்து மக்களை வழிநடத்த முனைந்துள்ளது? என்ற கேள்வி தற்சமயம் பல தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்றது.
குறிப்பாக இந்தப் பேரணியை அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்து, மாவட்ட முஸ்லிம்களை பேரினவாதிகளிடமும், அரசிடமும் காட்டிக்கொடுக்கவும், பலிக்கடாவாக்கவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை முன்னைந்துள்ளது என்றும் ஒரு சாரார் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்தப் பேரணி தொடர்பாகத் தென்கிழக்கின் பல பிரதேசங்களிலிருந்தும் பல தரப்பட்ட எதிர்க்கருத்துக்களும் கிளம்பியுள்ள நிலையில், முக நூல்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு வாதப் பிரதி வாதங்களும் தொடர்ந்த வண்ணமுள்ளன.
கொவிட்டைக் காரணம் காட்டி 20 நாள் பச்சிளம் முஸ்லிம் குழந்தையை எரிக்கும்போது பண்ணாத ஆர்ப்பாட்டம் இப்போது எதற்காக?
வயோதிப ஜனாஸாக்களை எரிக்கும் போது பண்ணாத ஆர்ப்பாட்டம் இப்போது ஏன்?
காணி, நிலம் விடுப்பு ஒன்றை வேண்டி நடத்தாத ஆர்ப்பாட்டம் இப்போது எதற்காக?
மாணிக்கமடுவில் புத்தர் சிலைகள் அத்துமீறி வைக்கப்பட்ட போது பண்ணாத ஆர்ப்பாட்டம் இப்போது எதற்காக?
பொத்துவில் மண்மலை விடுவிப்புக்கு செய்யாத ஆர்ப்பாட்டம் இப்போது எதற்கு?
இனவாத அரசையும், இனவாதிகளையும் வெறுப்பேற்றும் நடவடிக்கைகயை இப்பேரணி மூலம் ஏன் அரங்கேற்ற வேண்டும்?
இவ்வாறெல்லாம் முஸ்லிம் காங்கிரஸையும், அதன் தலைமையை நோக்கியும் தற்சமயம் கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டும் வருகின்றன.
கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்றைய அரசுக்கு வால் பிடித்து சுகபோகங்களையும், கொமிசன்களையும் அனுபவிக்கும்போது, மக்களை மடையர்களாக்கி பேரணி என்ற போர்வையில் சுய நலஅரசியல் இலாபத்திற்காக நாடகம் ஆடுவதாகவும் கருத்துக்கள் கூறப்படுகின்றது.
எத்தகைய கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் தென்கிழக்கின் அட்டாளைச்சேனையில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியை வெற்றிகரமாக நடத்துவதில் முஸ்லிம் காங்கிரஸ் உறுதியாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House