மரண தண்டனைக் கைதியே, கர்ப்பிணியின் கொலைச் சூத்திரதாரி

ஊர்காவற்றுறை பகுதியில் 2017 ஜனவரி 24ஆம் திகதி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணித் தாயின் வழக்கு விசாரணைகள் 5 ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெடுந்தீவில் 12 வயதுச் சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட ஈ.பி.டி.பியின் முன்னாள் உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார்.

ஊர்காவற்றுறை பகுதியில் 2017 ஜனவரி மாதம் 24ஆம் திகதி பட்டப்பகலில் வீடு புகுந்து ஒரு பிள்ளையின் தாயும், ஏழு மாத கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா (வயது-27) என்ற பெண் அடித்துப் படுகொலை செய்யபட்டார். ஊர்காவற்றுறை நீதிமன்ற உத்தியோகத்தரான பெண்ணின் கணவர், பணிக்குச் சென்றிருந்தபோதே இந்தக் கொலை நடந்தது.

படுகொலை சம்பவம் தொடர்பில் சகோதர்களான இருவர் அன்றைய தினம் மாலை மண்டைதீவு சந்தியில் உள்ள ஊர்காவற்றுறை பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் கண் கண்ட சாட்சியாக பொலிஸாரால் முன்னிலைப்படுத்தப்பட்ட வாய்பேச முடியாத சிறுவன் அடையாள அணிவகுப்பில் சந்தேக நபர்கள் இருவரையும் அடையாளம் காட்டியிருந்தார்.

இந்த நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் 5 வருடங்களாக சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. சந்தேகநபர்கள் இருவரும் 17 மாதங்களின் பின் மேல் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கொலை இடம்பெற்று ஒரு வருடமாக பொலிஸாரினால் வழக்கு இழுத்தடிப்புச் செய்யப்பட்டதால் ஊர்காவற்றுறை நீதிமன்றின் அப்போதைய நீதிவான் ஏ.எம்.எம். றியாழ், விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸாரிடமிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றுமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கர்ப்பிணிப் பெண் கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகளின் பின் பிரதான சந்தேக நபர் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டார்.

கொலையாளியான நெடுந்தீவைச் சேர்ந்த ஈ.பி.டி.பியின் முன்னாள் உறுப்பினரான ஜெகதீஸ்வரனுக்கு 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அப்போதைய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தண்டனை தீர்ப்பளித்திருந்தார்.

சிறுமியைக் கொலை செய்த குற்றவாளியே ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண்ணையும் கொலை செய்தார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்ற விசாரணை பிரிவினர் முதன்மை சந்தேக நபரை அவரது தண்டனை சிறைச்சாலையில் வைத்து கைது செய்து நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தினர்.

விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் சந்தேக நபரை வரும் 28ஆம் திகதிவரை கட்டுக்காவலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

மரண தண்டனைக் கைதியே, கர்ப்பிணியின் கொலைச் சூத்திரதாரி

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House