
posted 3rd March 2022
மண்ணெண்ணையும் இப்போ இல்லை
காஸ் வெடிப்புச் சம்பவங்களுக்கு பயந்து மண்ணெண்ணெய் அடுப்பு வாங்கினோம். இப்போது மண்ணெண்ணையும் இல்லை என கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இன்று விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நீண்ட வரிசையில் நின்றும் எரிபொருள் கொள்கலனுக்கு வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
வாள்வெட்டுக் குழுத் தாக்குதல்
நவாலி பகுதியில் நேற்று புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் வீடு புகுந்த வாள்வெட்டுக் குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தாக்குதல் நடத்த வந்த வாள்வெட்டு கும்பலில் ஒருவரை வீட்டார் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
திருச்சபை வீதி, நவாலி வடக்கு பகுதியிலுள்ள வீடொன்றினுள், நேற்று புதன்கிழமை அதிகாலை 3.20 மணியளவில் அத்துமீறி நுழைந்த வாள்வெட்டு குழு, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியதோடு, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொருக்கி, வீட்டிலிருந்த இளைஞனின் மீது தாக்குதல் நடத்த முற்பட்டவேளை அவர் தப்பிச் சென்றுவிட்டார்.
குறித்த இளைஞனின் தந்தையான நடராசா அருள் றொபின்சன் (வயது 48) என்பவர் வாள் வெட்டுக்கு இலக்காகி காயமடைந்தார்.
இதனையடுத்து அயலவரின் உதவியுடன் வாள்வெட்டுக் கும்பலில் ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்ட நிலையில் குறித்த நபரிடம் இருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
பிடிக்கப்பட்ட நபர் மானிப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். குறித்த சந்தேகநபரை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன்