
posted 1st March 2022

தவிசாளர் எம்.ஏம்.எம். தாஹிர்
நாட்டில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு அரசாங்கத்தைக் கோரும் தீர்மானம் ஒன்று நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிந்தவூர் பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிந்தவூர் பிரதேச சபையின், 4 ஆவது சபையின் 47 ஆவது கூட்ட அமர்வு தவிசாளர் எம்.ஏம்.எம். தாஹிர் தலைமையில், சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்ட அமர்வில், இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு அரசைக் கோரும் முக்கிய தீர்மானத்திற்கான பிரேரணையை தவிசாளர் தாஹிர் சபையில் முன்மொழிய, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ரி.எம். சப்றாஸ் வழிமொழிந்தார்.
தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“இலங்கையில் மிக நீண்டகாலமாக அமுலிலுள்ள பயங்கரவாததடைச் சட்டம் மக்களுக்குப் பெரும் அநீதியாக அமைந்துள்ளது.
குறிப்பாக இன்றைய அரசாங்கம் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களை அநியாயமாகப் பழிதீர்க்கவும், அச்சமூட்டி அடக்கி ஆளவும் இச்சட்டத்தைப் பிரயோகித்து வருவது பெரும் கவலைக்குரியதும், விசனிக்கத்தக்கதுமாகும்.
குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதில் தவறில்லையெனினும், இந்த மிக மோசமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் மக்களின் இறையாண்மையை, மனித உரிமைகளை மீறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
அன்று சிறுபான்மை தமிழ் மக்களைப் பழிதீர்ப்பதற்கும், அடக்கி ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாததடைச்சட்டத்தினால் இன்று மூவின மக்களும் பாதிக்கப்படும் நிலமையே உருவெடுத்துள்ளது.
குறிப்பாக ஏதுமறிய முஸ்லிம்களைப் பழிதீர்ப்பதற்காக இச்சட்டம் தற்சமயம் பயன்படுத்தப்படுகின்றது.
ஈஸ்டர் தாக்குதலையடுத்து பல முஸ்லிம்கள், உலமாக்கள், றிஸாட் போன்ற அரசியல் தலைமைகள், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ஹஜ்ஜுல் அக்பர் போன்றோர் மீதும் இந்த சட்டம் பாய்ந்தது.
இதேபோன்றே இச்சட்ட மூலம் முஸ்லிம்களை இலக்கு வைத்து பழி தீர்க்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன.
இந்த வகையில், தேர்தல் ஒன்றுக்கான முன்னெடுப்பாகவும், சிங்கள பேரினவாதிகளுக்க தீனிபோடுவதற்காகவும் இன்றைய அரசு, தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் தொடர்பான சில செயற்பாடுகளையும், இன்னும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளையும் முடுக்கி விட்டுவருகின்றது.
எனவே தொடர்ந்தும் முஸ்லிம் மக்களைச் சூடாக்கும் பேரினவாத, இனவாத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.
அரசு சகல மக்களையும் அரவணைத்துச் செல்ல முன்வரும் அதேவேளை மக்களை வாட்டிவதைக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக இரத்துச் செய்து நீக்கவும் உடன் ஆவன செய்ய வேண்டும்” என்றார்.
முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House