
posted 23rd March 2022
மருந்துகளின் பற்றாக்குறை - கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளது
யாழ். போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் பதில் பணிப்பாளர் வைத்தியர் மு. நந்தகுமார் தெரிவித்தார்.
மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
அத்துடன் சில மருந்துப் பொருட்கள் குறைந்தளவிலேயே உள்ளன.
இதனாலேயே சத்திர சிகிச்சைப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் மருந்துப் பொருட்களுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அவை கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் மு. நந்தகுமார் மேலும் கூறினார்.
பயங்கரவாதத் தடுப்பு திருத்தச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இலங்கைப் பாராளுமன்றத்தில், செவ்வாய்க்கிழமை பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூல இரண்டாம் மதிப்பீட்டை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் சமர்ப்பித்து விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.
இதில் அரசு தரப்பை தவிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்தே கருத்துக்களை வெளியிட்டன.
காலை 11 மணிக்கு ஆரம்பித்த விவாதம் மாலை 4.30 மணிக்கு முடிவுக்கு வந்த நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி.யான எம்.ஏ. சுமந்திரனும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் எம்.பி.யுமான அநுரகுமார திஸநாயக்கவும் சட்டமூலம்மீது ஒரே நேரத்தில் வாக்கெடுப்பைக் கோரினர் .
இதனையடுத்து நடந்த வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் அதன் பங்காளிக் கட்சிகளான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன எதிராக வாக்களித்தன.
இறுதியில் ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 51 மேலதிக வாக்குகளால் பயங்கரவாத தடுப்பு சட்ட மூலம் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்துக்கேற்ப திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
சட்ட விரோத செயல்களுடன் தொடர்புடைய பலர் கைது
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த 19ஆம் திகதி தொடக்கம் 21 திகதி வரையான காலப்பகுதியில் சட்ட விரோத செயல்களுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி 15 லீற்றர் சட்டவிரோத கசிப்பை மோட்டார் சைக்கிள் மூலம் வேறொரு பகுதிக்கு கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அன்றைய தினமே சுண்டிக்குளம் கடல்கரைப் பகுதியில் ஒருவரின் சங்கிலியை அறுத்து தப்பிச் செல்ல முற்பட்டவர் பொலிஸாரிடம் அகப்பட்டபோது அவர் சங்கிலியை விழுங்கியுள்ளார். உடனடியாக அவர் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவரிடமிருந்து சங்கிலியை பொலிஸார் மீட்டனர்.
கடந்த 20ஆம் திகதி 2500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டு காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 21ஆம் திகதி சந்தேக நபர் கைதானதுடன் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
அன்றைய தினமே கல்லாற்று பாடசாலைக்குச் சொந்தமான நீர் இறைக்கும் பம்பி திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் சந்தேக நபரிடம் இருந்து மூன்று தண்ணீர் பம்பிகளையும் பொலிஸார் மீட்டனர்.
இதேவேளை, வாகன அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய 5 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
கொலைச் சம்பவத்தையடுத்து இராணுவம் கடமையில்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்தும் நோக்கில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நிலைமையைக் கட்டுப்படுத்த இவ்வாறு இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடுமையான நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் நிற்பதே இதற்கு காரணமாகும்.
இன்றைய நாட்களில் எரிபொருளைப் பெறுவதற்குப் போராடும் மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
இதன் விளைவாக, மக்களிடையே தகராறுகள் ஏற்படுவதுடன் கடந்த ஞாயிறு கொலைச் சம்பவமொன்றும் பதிவாகியது.
அத்துடன் அண்மையில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த முதியவர்கள் இருவர் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதனை தொடர்ந்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தீவிர கண்காணிப்புகளை மேற்கொள்ளும் நோக்கில் இராணுவத்தினரை ஈடுபடுத்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House