
posted 22nd June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ரணில் மன்னார் மீனவர்களை சந்திக்கவேண்டும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னாரிற்கு வருகைத்தந்து கடற்றொழிலாளர்களின் கோரிக்கையை கேட்டறிந்து வாக்குகளை கோரவேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்றுவெள்ளி இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை நீண்ட புரையோடிப்போன ஒரு விடயமாக உள்ளது. கடந்த வாரம் மன்னாருக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதியை சந்திப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் பயனளிக்கவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மன்னார் விஜயம் எதற்கானது என்று கூட தெரியவில்லை. வடக்கில் உள்ள பல்வேறு வளங்களை எவ்வாறு அன்னியர்களுக்குக் கையளித்து எவ்வாறு இந்த நாட்டிற்கான வருவாயை பெற்றுக்கொள்ளலாம் என்பதே இதன் பிரதான காரணமாக உள்ளது.
நிலமாக இருந்தாலும் சரி, கடலாக இருந்தாலும் சரி இந்த இரண்டையும் மையப்படுத்தியதாக காணப்படுகின்றது. கடலில் இருக்கின்ற அனைத்து வளங்களும் இந்தியாவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. காற்றாலையாக இருந்தாலும் சரி, கணிய மணல் அகழ்வாக இருந்தாலும் சரி இந்தியாவிடம் கையளிக்கப்பட்டு விட்டது.
நாங்கள் கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை கதைப்பதற்காக மாத்திரமே ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பம் கோரினோம். எந்த அபிவிருத்திக்கும் நாங்கள் தடையானவர்கள் இல்லை. எமது வாழ்வாதார பிரச்சினையைக் கதைப்பதற்கு அவரை அணுகுகின்ற போது அவர் அதை தட்டிக் கழிக்கின்றார் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)